இருக்கும் போது, சேலை நனைய கடல் அலையில் விளையாட அவளுக்கு சங்கோஜமாக இருந்தது. எனவே இயல்பாக மனதில் எழுந்த ஆர்வத்தை அடக்கி விட்டு, பொய்யான சாக்கு போக்கு சொல்லி மணலில் அமர்ந்துக் கொண்டாள். அவள் மனதில் இருப்பதை புரிந்துக் கொண்டதாலோ இல்லை விவேக்குடன் அவள் தனியாக பேச சந்தர்ப்பம் அளிக்க விரும்பியோ, உமாவும், பவித்ராவும் அவளை பெரிதும் வற்புறுத்தவில்லை. மது மட்டும் பாரதியை விட்டு செல்லாமல் அவளுடனேயே அமர்ந்திருந்தாள். ஆனால் மற்றவர்கள் விளையாடுவதை பார்த்தபடி அமர்ந்திருந்த மதுவிற்கு ஒரு சில நிமிடங்களுக்கு மேல் அப்படி விலகி அமர்ந்திருக்க முடியவில்லை. எனவே பாரதியிடம் சொல்லிவிட்டு தன் வயதிற்கே உரிய ஆர்பாட்டத்துடன் அலைகளுக்கு போட்டியாக துள்ளி குதித்து சென்றாள்.
மது அங்கிருந்து நகர்ந்த சில நொடிகளில் எல்லாம் அதற்காகவே காத்திருந்தது போல் விவேக் பாரதி அருகில் வந்து சேர்ந்தான்.
"என்ன லெக்சரர் மேடம் இங்கேயே உட்கார்ந்திருக்கீங்க?"
"ப்ச்... சும்மா தான்..."
"நீங்க ரொம்பவே வித்தியாசமான ஜீவன், பீச்சுக்கு வந்து இப்படி கடல் பக்கம் போகாமல் தள்ளி இருப்பது நீங்களா தான் இருக்கும்..."
"ஏன் அந்த பக்கம் இரண்டு அம்மா இருக்காங்களே, அவங்க கூட தான் கடல் பக்கம் போகலை..."
"கையில் குழந்தை இருப்பதால் தான் அப்படி தள்ளி இருக்காங்க... "
அப்படியா என்பது போல் அவனை பார்த்து விட்டு, கமலா, கற்பகம் இருந்த அந்த மண்டபம் பக்கம் பார்வையை திருப்பினாள் பாரதி. ஒரு சில வினாடிகளுக்கு பிறகு,
"அப்போ நான் போய் குழந்தைகளை வாங்கிட்டு அவங்க இரண்டு பேரையும் அனுப்பி வைக்கிறேன்..." என்றாள்.