தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - பிந்து வினோத்
09. மனம் விரும்புதே உன்னை... உன்னை...
சஞ்சீவ் இந்துவின் கேள்வியைப் பற்றி யோசித்துக் கொண்டே இல்லை என்று தலை அசைத்தான்.
"எனக்கு ஒரு கெஸ் இருக்கு... சொல்லட்டுமா? நீங்க தப்பா எடுத்துக்க மாட்டீங்களே?" இந்து அவனை நேராக பார்த்துக் கேட்டாள்!
"சொல்லுங்க..." என்றான் சஞ்சீவ் ஆச்சர்யத்துடன். முன் தினம் ஒரு வார்த்தையும் பேசாதவள் இன்று அவனுடன் இவ்வளவு நேரம் பேசுவதே அவனுக்கு சந்தோஷமாக இருந்தது.
"இது என்னோட கெஸ் தான்... சரியான்னு தெரியலை... உங்க குடும்பத்தில எல்லோரும் உங்க அம்மாவை பத்தி கொஞ்சம் குறைவா அபிப்ராயம் வச்சிருக்கீங்க. இப்போ உங்க அப்பாவை பாருங்க, உங்களுக்கும் ராஜீவுக்கும் பணம் போட்டு வச்சிருந்தார், சரி தான். ஆனால், அதை ஏன் அப்படி உங்க பேர்ல பத்து பதினைஞ்சு வருஷம் முன்னாடி போடணும்? உங்க அம்மாவை ஒரு nominee யாகவாவது சேர்த்திருக்கலாம் தானே? நீங்களும் உங்க அண்ணாவும் கூட உங்க அப்பா போல தான். எதையும் முடிவு செஞ்சப் பிறகு தான் உங்க அம்மா கிட்ட சொல்றீங்க. என்னைக்காவது எந்த விஷயத்திலாவது அவங்க அபிப்ராயம் கேட்டு இருக்கீங்களா? படிப்பு, கல்யாணம், தொழில் இப்படி எல்லாத்திலயுமே, அப்படி தான் செய்றீங்க... ஆனால், உங்க அம்மா எந்த விதத்திலயும் குறைஞ்சவங்க இல்லை... உங்க அப்பா இறந்தப் பிறகு ஊரில இருக்கிற உங்க இடங்களை அவங்க தம்பிய வச்சு பார்த்ததிலாகட்டும், இல்லை உங்க அப்பா பேரில் டிரஸ்ட் உருவாக்கி நிறைய பேர் படிக்க உதவுறதிலையா இருக்கட்டும், உங்க வீட்டில வேலை செஞ்சவங்கன்னு பார்க்காம கலா க்கு உதவி செய்றதிலையா இருக்கட்டும்... அவங்க ரொம்ப உயர்வானவங்கன்னு தெரிஞ்சுக்கலாம். ஆனால், அது கூட இருக்கிற உங்களுக்கு புரியலை.. கீதா அக்காக்கு புரிஞ்சிருக்கு! அக்கா ஆன்ட்டி கிட்ட சொல்லிட்டு தான் எல்லாம் செய்றாங்க. எப்போ எங்கே வெளியே போனாலும் உங்க அம்மாக்கு பிடிச்சதா ஏதாவது வாங்காம இருக்க மாட்டாங்க. ஸோ, அவங்களைப் புரிஞ்ச ஒரு மருமகள் கிடைச்ச சந்தோஷம் உங்க அம்மாக்கு... சொல்லுங்க நீங்க யு.எஸ்'ல இருந்து வந்தப்போ உங்க அம்மாக்கு என்ன வாங்கிட்டு வந்தீங்க?"
இந்துவின் கேள்வியில் நிஜமாகவே திக்குமுக்காடி போனான் சஞ்சீவ். அவன் நண்பர்களுக்கு என பல பொருட்கள் வாங்கி வந்தான். ஏன் ராஜீவிற்கும் கீதாவிற்கும் கூட வாங்கி வந்தான்.