சற்று முன் அவன் கையைத் தொட்டப் போது உடனே இழுத்துக் கொண்டவள், இவர்கள் இருவரிடமும் சகஜமாக, கைக் குலுக்கிப் பேசுவதை தவறாக எடுத்துக் கொள்வானோ?
இந்துவின் மனதில் தோன்றிய அதே எண்ணம் தான் சஞ்சீவின் மனதில் ஓடுகிறது என்று பார்த்ததுமே அவளுக்குப் புரிந்தது. அதை வெளியில் காட்டாது, சஞ்சீவி மற்ற இருவருக்கும் அறிமுகம் செய்து வைத்தாள்.
"இவர் மிஸ்டர் சஞ்சீவ். ராஜீவ் இருக்கார் இல்லையா அவரோட பிரதர்...."
"ஒ உங்க ஃபிரெண்ட் கீதாவோட பிரதர் இன் லாவா?" என்ற பிரசாத், சஞ்சீவிடம் திரும்பி,
"என் பேர் பிரசாத். கிளாட் டு மீட் யு, சஞ்சீவ்" என்றான்.
சஞ்சீவ் பேருக்கு சிரித்து வைத்தான். இவனுக்கு ராஜீவ் என்ற உடனே அண்ணனை தெரிகிறது, அண்ணியும் இந்துவும் தோழிகள் என்பதும் தெரிந்து இருக்கிறது. இது நல்லதில்லையே...
சஞ்சீவ் யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில், இந்து பக்கம் திரும்பிய பிரசாத்,
"ஆன்ட்டி எப்படி இருக்காங்க, இந்து?" என்றான்
"நல்லா இருக்காங்க... உங்க வீட்டில அம்மா, அப்பா, பிரியா எல்லாம் எப்படி இருக்காங்க?"
"ரொம்ப நல்லா இருக்காங்க... ஆன்ட்டி என்னைப் பத்தி ஏதாவது உங்க கிட்ட சொன்னாங்களா?"
இல்லை என்று குழப்பத்தோடு தலை அசைத்தாள் இந்து.
"ஒ ஓகே... சரி இந்து, அப்புறம் பார்ப்போம்... யு கேரி ஆன்.... பை இந்து, பை சஞ்சீவ்.." என்று பேச்சை முடித்துக் கிளம்பினான் பிரசாத்.