"இந்த பாட்டை கவனிச்சீங்களா? நான்காம் சந்திப்பில் காதல் வந்துச்சுன்னு பாடுறாங்களே...."
இந்து எனன என்பதுப் போல் பார்த்து கொண்டிருக்கவே, சஞ்சீவே தொடர்ந்தான்.
"உங்களுக்கும் இந்த 'அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் ' தெரியும் தானே.. ஆனால், அது எப்படிங்க ஒருத்தரை பார்த்த உடனே காதல் வரும்...?"
"எப்படி வரும், வராது தான்..."
"ஆனால் ராமரும் சீதாவும் பார்த்தவுடனே காதல் வசமாயிட்டாங்கன்னு தானே சொல்றாங்க?"
"அந்தக் காலத்தில திறமையானவங்களோட புகழ் எல்லா திசையிலும் பரவி இருக்கும்.. ராமர் வீரத்தில் சிறந்தவர் அப்படின்னு சீதா நிறைய கேள்வி பட்டிருந்தாங்க.. அதே போல் சீதாவோட அழகை பத்தியும் ராமர் கேள்வி பட்டிருந்தார். ஸோ, ஏற்கனவே ரெண்டு பேருக்கும் பார்க்காமலே ஒரு ஈர்ப்பு இருந்திச்சு.. அப்போ அவங்க முதல் முறையா பார்க்கும் போதே காதல் வந்ததில் தப்பு இல்லை தானே?" என்றாள் இந்து அவளின் புன்சிரிப்போடு.
"சூப்பர் இந்து.. எனக்கு இப்போ குழப்பம் எல்லாம் போயே போச்சு.." என்ற சஞ்சீவ் சந்தோஷ மிகுதியில் அவள் கையை பிடித்து குலுக்கினான்.
இந்து அடுத்த வினாடி தன் கையை இழுத்துக் கொண்டாள். சஞ்சீவிற்கு முகத்தில் அறைந்த மாதிரி இருந்தது. அவன் செய்தது தவறு என்று எடுத்துக் கொண்டால் கூட, அவள் அமைதியாக கையை விலக்கி இருக்கலாமே. இந்த காலத்தில் ஒரு ஆணும் பெண்ணும் கைக் குலுக்குவதை யாரும் தவறாக எடுத்துக் கொள்வதில்லை என்பது கூடவா அவளுக்கு தெரியாது. இதில் இவ்வளவு பெரிய பிசினஸ்-ஐ நடத்தும் பிசினஸ் வுமன் வேறு!
சஞ்சீவ் கடுப்புடன் இருக்க... இந்துவும் தன் செய்கையால் திகைத்து தான் போயிருந்தாள்! அவள் எனன செய்வது யோசிக்கும் போதே, அவர்களின் காஃபி வந்து சேர்ந்தது.