தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 25 - பிந்து வினோத்
25. எந்தன் உயிரே... எந்தன் உயிரே...
முன் மதிய நேரத்தில், தன் அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்துக் கொண்டிருந்தாள் பாரதி. அது ஒரு வார நாள் என்பதால், விடுதியில் தங்கி அலுவலகம் செல்பவர்கள் அனைவரும் வேலைக்கு சென்றிருந்தனர். அதனால் விடுதியே அமைதியாக இருந்தது.
பாரதியை தவிர கல்லூரி, பள்ளிகளில் பணி புரிபவர்களும் பயில்பவர்களும் விடுமுறையை கொண்டாட சொந்த ஊருக்கு சென்றிருந்தனர். பாரதிக்கு அவளின் ஊருக்கு செல்ல விருப்பம் இல்லை. அங்கே அவள் சிறு வயது முதல் வாழ்ந்த, வளர்ந்த வீடு இருந்தது. அவளுக்கு அந்த வீட்டை மிகவும் பிடிக்கும். அவளுடைய அம்மா அப்பா இருந்தப் போது, விடுமுறை என்றாலே ஊருக்கு கிளம்பி விடுவாள்... ஆனால் அவர்கள் இறந்தப் பிறகு அங்கே செல்ல அவளுக்கு தயக்கமாக இருந்தது. பாரதி அங்கே சென்றே ஒரு வருடத்திற்கும் மேல் ஆகி விட்டிருந்தது. திடீரென,
"பாரதி! பாரதி, உன்னைப் பார்க்க விவேக்குன்னு ஒருத்தர் வந்திருக்கார்..." என்ற சமையல் ஆயாவின் குரல் விடுதியின் அமைதியை கிழித்துக் கொண்டு ஒலித்தது. யோசிக்காமல்,
"நான் வரேன் ஆயா...." என்று சொல்லியபடி படிகளில் இறங்க துவங்கினாள் பாரதி.
***********
காலியாக இருந்த விசிட்டர்ஸ் இடத்தில், மற்ற நாட்கள் போல் இல்லாமல் விவேக் படிகள் பக்கம் தன் பார்வையை பதித்து வைத்து இருந்தான். அவன் வந்திருப்பதை உலகிற்கே கேட்பதுப் போல அறிவித்த உடன், ஒரு சில வினாடிகளில் எல்லாம் பாரதி அவனுக்கு காட்சியும் அளித்தாள்.
வெளிர் மஞ்சள் நிற காட்டன் புடவையில் எளிமையாக தோன்றியவளை இமைக்காமல் பார்த்தப்படி நின்றான் விவேக். வயதான ஆயாவிடம் நன்றி சொல்லிவிட்டு, பாரதி அவன் பக்கம் திரும்பும் முன், அவசரமாகப் பார்வையை அவள் பக்கம் இருந்து திருப்பிக் கொண்டான்.
அவன் அருகே வந்த பாரதி,