“அதிகமா வேணும்னாலும் சொல்லு, தரேன்... என் மகனை விட்டுட்டுப் போயிடு....” என்றாள் விஜயா.
காய்கறி பேரம் பேசுவது போல அவர்கள் அவளின் வாழ்க்கையை பேரம் பேச,
“எனக்கு உங்க பணம் எதுவும் வேண்டாம்... என் மேல அதிகமா அன்பு வச்சிருக்குறவர் என் கணவர் தான்... உங்க பேச்சு என்னை மட்டும் அசிங்கப் படுத்தலை அவரையும் சேர்த்து தான் அசிங்கப் படுத்துது...” என்றாள் சுவாதி கசப்புடன்.
“இங்கே பார்... விஷாகனை பத்தி உன்னை விட எனக்கு அதிகமா தெரியும்... அவனைப் பத்தி நீ சொல்லி தெரிஞ்சுக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை...”
“அண்ணி, விஷாகன் பேரை சொல்லி பணம் அதிகமா கறக்க நினைக்குறா போல இருக்கு...”
பத்மினி மீண்டும் பணம் பற்றி பேச, இந்த முறை சுவாதியால் அமைதியாக இருக்க முடியவில்லை.
“நீங்க இப்படி பேசுறது எனக்கு ரொம்ப அவமானமா இருக்கு. எனக்கு பணம் ஒரு பைசாவும் வேண்டாம்... வேண்டியது எல்லாம் என்னோட கணவருடைய அன்பு தான்... என் மேல யாருமே அவர் போல அன்பு வச்சதில்லை...”
“இந்த கதை எல்லாம் எங்களுக்கு வேண்டாம்... விஷாகன் என்ன செய்றேன்னு புரியாமல் உன்னை கல்யாணம் செய்திருக்கான்... இந்த வயசில சில விஷயங்கள் முதல்ல முக்கியமா தோணும்... ஒரு சில வருஷங்கள் போனப் பிறகு யோசிச்சுப் பார்த்தால் தப்பு செய்திட்டேனோன்னு கேள்வி வந்து உறுத்தும்... நீ மட்டும் அவன் கண் பார்வையில் படாமல் இருந்தா இந்த உன்னோட மாயை அவனுக்குப் புரிஞ்சிடும்... தானா மறைஞ்சும் போயிடும்...”
“நான் அவர் முன்னாடி இல்லாம போனா அவர் என்னை மறந்திடுவாரா? அவ்வளவு ஈசியா அது?”
Bindu Vinod has written more than 31 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.