இருக்குன்னு பார்த்தாலே உனக்குத் தெரியலையா?"
பாரதி அவன் சொன்னதன் பொருள் புரிந்து அதிர்ச்சியில் பதில் சொல்லாது அமர்ந்திருந்தாள்.
"ஹலோ பாரதி மேடம், என்ன ஆச்சு?"
"இல்லை விவேக், நான் இதை யோசிக்கவே இல்லை, அப்போ அவங்க சும்மா சொன்னாங்களா?"
விவேக் சிரித்தப்படி ஆம் என்று தலை அசைக்கவும்,
"ஏன்?" எனக் கேள்வி கேட்டாள் பாரதி.
"அதுக்கு நான் தான் காரணம், பாரதி. அம்மாவிற்கு எனக்கு சீக்கிரம் கல்யாணம் செய்து வைக்க ஆசை. ஆனால், நான் உன்னைத் தவிர வேறு யாரையும் கல்யாணம் செய்துக் கொள்வதாக இல்லைன்னு சொல்லிட்டேன். அவங்க செலெக்ட் செய்தவளை விட நீ எந்த விதத்தில் ஸ்பெஷல் என்று தெரிந்துக் கொள்ள தான் அப்படி உன் கிட்டப் பேசினாங்க. நீ தப்பா எடுத்துக்காதே, உன்னிடம் இந்த உண்மையை சொல்லாமல் மறைக்க எனக்கு விருப்பமில்லை. அம்மாவும் ஒரு ஜாலி டைப் அது தான்..."
பாரதி விவேக் சொன்ன விஷயங்களைக் கேட்டு இன்னும் அதிகமாக திகைத்துப் போய் அமர்ந்திருந்தாள். அவளை ஒரு பார்வைப் பார்த்த விவேக்,
"கம் ஆன் பாரதி, உனக்கு என் மனதில் இருப்பது தெரியாதுன்னு சொல்லாதே!" என்றான்.
"ஆனால் விவேக், நான் முன்பே ..."
அவள் பேசி முடிக்கும் முன், அவர்கள் ஆர்டர் செய்த உணவு வகைகள் வந்து சேர்ந்தன. விவேக்கின் மூளை வேகமாக வேலை செய்தது. உணவு வகைகளை மேஜை மீது வைத்து விட்டு, அவர்களின் தட்டிலும் பரிமாறி விட்டு, அந்த ஹோட்டல் சிப்பந்தி நகரவும், விவேக் அவசரமாக பாரதியை முந்திக் கொண்டுப் பேசினான்.