மதியூர் மிஸ்டரீஸ் - 1 - தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 05 - Chillzee Story
This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.
அதிகாரத்துடன் காதில் விழுந்த அந்த கேள்வி அபினவிற்கு இதத்தைக் கொடுத்தது. அவனுடைய மனம் சொன்னதுப் போல அஹல்யா நல்லவள் என்ற நம்பிக்கையை அதிகமாக்கியது.
“ஹலோ. நான் சப் இன்ஸ்பெக்டர் அபினவ்!” சத்தமாக பதில் சொன்னான் அபினவ்.
நின்ற இடத்தில் இருந்தே அதை சொல்லிவிட்டு வீட்டுக்குள் இருந்து யாராவது வருகிறார்களா என்றுப் பார்த்தான்.
அவன் எதிர்பார்த்த அஹல்யா வரவில்லை! அவளுடைய மகனும், ஒரு சின்ன டாஷன்ட் நாய் குட்டியும் மூடி இருந்த க்ரில் கதவின் வழியாக எட்டிப் பார்த்தார்கள்.
ஏமாற்றத்தை காட்டிக் கொள்ளாமல் அஹ்ல்யாவின் மகனிடம் பால் இருந்த இடத்தைக் காட்டி,
“பால் உள்ளே விழுந்திருச்சு எடுத்துக்கட்டுமா?” என்று அனுமதிக் கேட்டான் அபினவ்.
சிறுவன் வாயை திறக்காமல் தலையை மட்டும் ஆட்டினான்.
அபினவ் கேட்டை முழுவதுமாக திறக்கவும், அஹல்யா உள்ளே இருந்து வந்தாள்.
சுரிதார் அணிந்திருந்ததால் சின்னப் பெண்ணாக தெரிந்தாள்.
“சாரி டு டிஸ்டர்ப் யூ. பசங்க விளையாடிட்டு இருந்த பால் உள்ளே விழுந்திருச்சு. நீங்க திட்டுவீங்கன்னு பயப்பட்டாங்க. அதான் நான் எடுத்து தரேன்னு சொன்னேன். சின்னப் பசங்க. தெரியாம உள்ளே போட்ருப்பாங்க.”
அபினவ் சொன்னதைக் குறுக்கிடாமல் பொறுமையாக கேட்டுக் கொண்ட அஹல்யா,
“எடுத்துக்கோங்க. அவங்க திட்டுவாங்கன்னு பயந்தது என்னைப் பார்த்து இல்லை,” என எதிர் வீட்டு மாடியை குறிப்பாய் பார்த்து சொல்லிவிட்டு உள்ளே போனாள்.