எழுந்து வெளியே சென்று விவேக்கிடம் பேசினாள் பாரதி.
🌼🌸❀✿🌷
சில நிமிடங்கள் கழித்து அறைக்கு திரும்பிய பாரதியின் முகம் இயல்புக்கு திரும்பி இருந்தது. மும்முரமாக அடுத்த வகுப்பிற்காக நோட்ஸ் எடுத்துக் கொண்டிருந்த பவித்ரா பாரதியை ஒரு பார்வை பார்த்து விட்டு மேலே ஒன்றும் சொல்லாது அமைதியாக இருந்தாள்.
மீண்டும் தன் இருக்கையில் அமர்ந்த பாரதி, பவித்ராவிடம்,
“பவி, நீ என்ன நினைக்குறன்னு சொல்லவா?” எனக் கேட்டாள்.
“ம்ம்ம்??” என்றாள் பவித்ரா சிறிது ஆர்வத்துடன்!
“மிஸர்ஸ் பாரதி விவேக் என்பதற்கு தனி மரியாதை இருக்குன்னு நீ சொன்னதுக்கு நான் எதுவும் சொல்லலையே அதாவது கோபப்படலையேன்னு தானே மனசுக்குள்ளே ஆச்சர்யப்பட்டுட்டு இருக்க?”
“சூப்பர் பாரதி! எப்படி இதெல்லாம்?"
"எனக்கு உன்னைப் பத்தி தெரியாதா என்ன? விவேக்கோட மனைவி என்பதால எனக்கு பிரிவிலேஜ் கிடைக்குதோ இல்லையோ, அவரோட மனைவியா இருக்குறது எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு..." என்றாள் பாரதி!
தோழியின் கண்களில் மின்னிய பெருமையை கவனித்தாலும், அதைப் பற்றி கேட்காமல்,
"அப்போ விவேக்கோட சமாதானம் ஆகியாச்சா?" என விசாரித்தாள் பவித்ரா.
“ம்ம்ம்.... போனா போகுது, ஏதோ நீ சொன்னீயேன்னு தான் அவர் கிட்ட பேசினேன்...” என்றாள் பாரதி இப்போது ஒரு ஸ்மைலுடன்!