“என் மொபைல்ல இருக்கும். நாளைக்கு எடுத்து தரேன் பாரதி. நீயாவது அவனிடம் சொல்லு...” என்றாள் கற்பகம் ஆதங்கத்துடன்.
“சரி அத்தை... நான் அவர் கிட்ட சொல்லி பார்க்கிறேன்...” என்றாள் பாரதி.
சொன்னதுப் போலவே மறுதினம் தன் வசம் இருந்த மருத்துவமனையின் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை பாரதியிடம் கொடுத்தாள் கற்பகம்.
“நீ கான்டாக்ட் செய்தால், என்னுடைய மருமகள்ன்னு சொல்லு பாரதி. புரிஞ்சுப்பாங்க... விவேக் இது வரைக்கும் அங்கே போனது இல்லை... நல்ல பெரிய ஹாஸ்பிட்டல் எல்லா ஃபேஸிலிட்டிஸும் இருக்கு...”
“சரி அத்தை, நான் பேசுறேன்..." என பாரதி சொன்னதும் திரும்பி நடக்க தொடங்கிய கற்பகத்தை மீண்டும் அழைத்தாள் பாரதி.
"அத்தை, அவரோட அப்பாயின்ட்மென்ட்ஸ் எல்லாம் யாரு பார்த்துக்குறாங்க?”
“விவேக்கோட செக்ரட்டரி லதா தான் அதை எல்லாம பார்க்குறா. ஏன் கேட்குற பாரதி??”
“சொல்றேன் அத்தை.... அவங்க நம்பர் உங்க கிட்ட இருக்கா?”
பாரதியை கேள்வியாக பார்த்தப் போதும், தன் மொபைலில் இருந்து லதாவின் நம்பரை நோட் செய்து அவளிடம் கொடுத்தாள் கற்பகம்.
இரண்டு எண்களையும் கையில் வைத்துக் கொண்டு, சோஃபாவில் அமர்ந்த பாரதி, முதலில் விவேக்கின் செக்ரட்டரி லதாவிற்கு ஃபோன் செய்தாள். இரண்டு ரிங்குகளில் எடுக்கப் பட்டு,
“ஹலோ மேடம், சொல்லுங்க...” என்று சற்றே பதற்றமான குரல் மறுமுனையில் ஒலித்தது.