“அடடா அடடா, என்ன ஒரு ஆக்டிங்ப்பா...” என்றாள் பவித்ரா கிண்டலாக.
🌼🌸❀✿🌷
அதன் பின் நாட்கள் வாரங்களாக, வாரங்கள் மாதங்களாக வேகமாக ஓடியது. விவேக்கிற்கும் பாரதிக்கும் திருமணம் முடிந்து மூன்று மாதம் ஆகி இருந்தது. விவேக்கிற்கு பாரதியின் மீது இருந்த அன்பும், காதலும் இன்னும் பல மடங்கு உயர்ந்திருந்தது. பாரதியும் கணவனின் அன்பில், காதலில் மூழ்கி இருந்தாள். அவனிடம் தன் இதயத்தையும் பறிக் கொடுத்திருந்தாள். அவர்களின் திருமண வாழ்வு இனிமையானதாக சென்றுக் கொண்டிருந்தது. முதல் நாள் என்றில்லாமல், பல நாட்கள் பாரதி தாமதமாக தான் கல்லூரிக்கு வந்தாள். அவள் நேரத்திற்கு வந்தால் தான் ஆச்சர்யம் என்று மற்றவர்கள் கேலி செய்யும் அளவிற்கு மாற்றம் ஏற்பட்டிருந்தது. அவள் தாமதமாக வந்த நாட்களில் அவளுக்கு காலை வகுப்பு இருந்தால், பவித்ரா தோழிக்காக “ப்ராக்ஸி” வேலை செய்தாள்.
இன்று நரேந்திரன் குடும்பத்தில் மருமகளாகி விட்ட பாரதியுடன் நட்புடன் பழக பலரும் முன் வந்தப் போதும், பாரதி அனைவருடனும் எப்போதும் போல் இயல்பாக பேசினாள். ஆனால், பவித்ராவுடன் மட்டுமே நட்புடன் பழகினாள். அன்றும் இன்றும் ஒரே விதமாக அவளிடம் நட்பு பாராட்டும் தோழி பவித்ரா அல்லவா!!
🌼🌸❀✿🌷
அது ஒரு வெள்ளிக்கிழமை மாலை... பல நாட்களுக்கு பிறகு விவேக்கிற்கு மீண்டும் தலைவலி வந்திருந்தது. வீகென்ட் என்பதால் விவேக்குடன் அதிக நேரம் செலவு செயலாம் என்ற ஆர்வத்துடன் இருந்த பாரதிக்கு ஏமாற்றமே... ஆனாலும் அவனின் வலி புரிந்து அவனை தூங்க வைத்து, அவள் மட்டும் மற்ற குடும்பத்தினர் இருக்கும் இடத்திற்கு வந்தாள். விவேக் தலைவலிக்காக இரவு உணவு வேண்டாம் என்று சொல்லி இருப்பது தெரியவும், கற்பகம் வழக்கம் போல் அவன் டாக்டரிடம் சென்று பரிசோதனை செய்துக் கொள்ளாமல் இருப்பதை பற்றி சொல்லி புலம்பினாள். கற்பகம் சொல்வதை கவனித்துக் கேட்டுக் கொண்டிருந்த பாரதி,
“அத்தை, நீங்க சொல்ற டாக்டர் ஃபோன் நம்பர் இருந்தால் கொடுங்களேன்,” என்றாள்.