”அப்புறம் எதுக்கும்மா இந்தக் கல்யாணம்”
”கல்யாணமா”
“பின்ன தாலி கட்ட சொன்னியே அதுக்கு பேரு என்ன கல்யாணம்தானே”
”இது கல்யாணமா சே சே ஒரு தண்டனைப்பா கொம்பனுக்கு நான் கொடுக்கற தண்டனை”
”இது என்ன தண்டனை புதுசா இருக்கு”
”ஆமாம்பா இந்த ஊர்க்காரங்க இதைதானே ஆசைப்பட்டாங்க, கொம்பனுக்கு அவனோட முறைப்பொண்ணுகூடதான் கல்யாணம் ஆகனும்னு ஆசைப்பட்டாங்களே, அவங்க ஆசை நிறைவேறனும் ஆனா, அதை நினைச்சி அவங்க வருந்தனும் எப்படின்னா கல்யாணம் ஆனாலும் இந்த கொம்பன் சாகற வரைக்கும் கட்டபிரம்மசாரியாதான் இருக்கனும், அவர் காசிக்கு போய் சந்நியாசி ஆகத் தேவையில்லை, இங்க இருந்துக்கிட்டே அவர் சந்நியாசியாதான் வாழனும் வாழ வைப்பேன்”
”என்னம்மா நீ பழிவாங்கற நேரமா இது தப்பும்மா அவனை பழிவாங்கறதா நினைச்சி உன் வாழ்க்கையை அழிச்சிக்காதம்மா”
”இனி என் வாழ்க்கையில என்னப்பா நல்லது நடக்கப் போகுது, திரும்பவும் நீங்க எனக்கு கல்யாணம் செய்து வைக்க ஏற்பாடு செய்வாங்க, அதை கொம்பன் பேர் சொல்லி இந்த ஊர்க்காரங்களே தடுப்பாங்க, மறுபடியும் நமக்கு அவமானம் கிடைக்கும், அந்த அவமானத்தில வெந்து சாகறதை விட இந்த தண்டனை எவ்வளவோ மேல்” என்றாள் அவளின் பேச்சில் இருந்த உண்மையை உணர்ந்தான் கொம்பன்
”என் மாமா பெத்த முறைப்பொண்ணே” என காவேரியைப் பார்த்து அழைக்க அவளோ வியப்புடன் அவனைப் பார்த்து என்ன என்பது போல் புருவத்தை உயர்த்தினாள்