அன்று கற்பகத்திற்கு மகளிர் முன்னேற்றக் குழு மீட்டிங் இருந்தது. பொதுவாக அந்தக் குழுவின் வழியாக பலப் பெண்களுக்கு பயன்படுவதுப் போல சமூக சேவைகள் செய்யப்பட்டாலும், கற்பகம் போல பல பணக்கார பெண்கள் அதில் பங்கெடுப்பதற்கு முக்கிய காரணம், அது அவர்களின் அந்தஸ்தை பறைசாற்றும் ஒரு விஷயம் என்பது தான். அதனாலேயே கற்பகம் தவறாமல் அதில் கலந்துக் கொள்வாள்.
அன்றும் அதே போல் மீட்டிங்கிற்கு சென்றவள், எப்போதும் போல் வந்திருந்த மற்ற பெண்களோடு கதை பேசிக் கொண்டிருந்தாள். அந்த குழுவின் அடுத்த முயற்சிகள் பற்றி ஒரு பக்கம் பேச்சு நடக்க, இன்னொரு பக்கம், புது நகைகள், சேலைகள் மற்றும் மற்ற வீட்டு வம்பு கதைகள் என ஓடிக் கொண்டிருந்தது! கற்பகத்திற்கு அது போன்ற வம்பு பேச்சுகளில் ஈடுபாடு இல்லை. ஆனால், நகை சேலை பற்றி எல்லாம் கேட்டு தெரிந்துக் கொள்வாள்.
அப்படி போய் கொண்டிருந்த பேச்சுக்கு நடுவே, ஸ்ருதியின் அம்மா சசிரேகா,
“கற்பகம், ரஞ்சனி சொன்னதைக் கேட்டீயா? உன் மருமகளுக்கு ஏற்கனவே ஏதோ லவ்வாமே?” என்று வம்பு பேச்சில் இருந்து விலகி இருந்த கற்பகத்திடம் தானாகவே அந்த ரஞ்சனியையும் அழைத்து வந்து, பேச்சை தொடங்கி வைத்தாள்.
“என்ன?” என்றாள் கற்பகம் குழப்பத்துடன்.
“ஆமாம் கற்பகம், நிஜம் தான். பழனியப்பா இருக்கார் தானே, அவரோட மருமகன் உன் மருமகளோட தான் காலேஜில் படிச்சானாம்... அப்போ தான் அவங்களுக்குள்ளே காதலாம்...”
கற்பகம் தன் குடும்ப விஷயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துக் கொள்வதும் இல்லை, அதே போல், பொதுவாக, அவளின் குடும்ப உறுப்பினர்களை எப்போதும் எதற்காகவும் விட்டுக் கொடுப்பதும் இல்லை! ஆனால், அவளுக்கு ஏதோ ஒரு காரணத்தினால் பாரதியின் மீது ஏற்பட்டிருந்த எதிர்மறை எண்ணத்தை மேலும் தூண்டுவது போல் ரஞ்சனி பேசவும், பதில் எதுவும் சொல்லாமல் அமர்ந்திருந்தாள்.
அதைக் கவனித்து மனதுக்குள் குஷியான சசிரேகா,