“பயங்கர அடிப் போல இருக்கே! மருந்து ஏதாவது போட்டுட்டு சாப்பிடுங்க. இட்லி ரெடியா இருக்கு,” என்றாள் சத்யா.
இட்லிக்காகவோ என்னவோ சாந்ததுரை இப்போது மருந்து போட்டுக் கொள்ள மறுப்பு எதுவும் சொல்லவில்லை.
‘பயங்கர அடி’ என்று சொன்ன இடத்தில் சத்யாவின் கண்கள் நகைப்புடன் சக்தி பக்கம் சென்றதை சாந்ததுரையும் கவனித்தான். அவனின் கவனமும் இப்போது சக்தி பக்கம் திரும்பியது. இருட்டில் அடி வாங்கியதால் அப்போது அவளை அவனால் சரியாக கவனிக்க முடியவில்லை. அதற்கு ஈடு செய்வதுப் போல இப்போது பார்த்தான்.
சத்யா முதலுதவி பெட்டி எடுத்து வந்தாள்.
“அப்போ நீங்க தான் காணாம போன அந்த வீட்டுப் பையன் ராஜாவா?” அவனுடைய கண்ணை சுற்றி டின்க்ச்சர் போட்டுக் கொண்டே கேட்டாள் சத்யா.
வலியில் அலறினான் அவன்!
“சத்யா, முதல்ல அவருக்கு ஆயின்ட்மென்ட் போட்டு, இட்லி கொடு. அப்புறமா கேள்விங்க கேட்கலாம். ஹாஸ்பிட்டல் போகலாம்னு சொன்னேன். வேண்டாம்ன்னு சொல்லிட்டாரு,” தென்றல்வாணன் அவர்கள் இரண்டுப் பேருக்கும் பொதுவாக சொன்னான்.
அதே அறையில் இருந்த சக்தி வேறு ஏதோ உலகத்தில் இருப்பவளைப் போல கைகளை மடித்துக் கொண்டு யோசனையுடன் உட்கார்ந்திருந்தாள்.
“நானே டாக்டர் தானே இன்ஸ்பெக்டர். சிஸ்டர், நீங்க என்னைப் பத்தி கவலையே பட வேண்டாம்,” என்றான் சாந்ததுரை.
மேலே கேள்விகள் கேட்காமல் ஆயின்ட்மென்ட் மட்டும் போட்டு விட்ட சத்யா, அவனுக்கு உணவைப் பரிமாறினாள்.