கிட்டேயே வர ஒருத்தனை கல்யாணம் செய்துக்குறது தான் பண்பாடுன்னு எனக்கு தோணலை... அவனுக்கு இப்போ கல்யாணம் ஆயிடுச்சுன்னு மட்டுமில்லை, எப்போ ஒருத்தியுடைய பணத்துக்காக மனசு மாறினானோ, அப்போவே அவனை என் மனசுல இருந்து தூக்கிப் போட்டுட்டேன்... இப்போ உங்க மகனை தவிர வேற யாருடைய நினைவு கூட என் மனசுல இல்லை... இது தான் அத்தை உண்மை...”
அன்று மஹாபலிபுரத்தில் பாரதி பணம் அவளின் வாழ்க்கையையே மாற்றி இருக்கிறது என்று கசப்புடன் சொன்ன போது என்னவென்று புரியாத விஷயம் கற்பகத்திற்கு இப்போது புரிந்தது.
பாரதியே தொடர்ந்துப் பேசினாள்...
“என்னுடைய அந்த கசப்பான எக்ஸ்பீரியன்ஸ்க்கு பிறகு ஆண்கள் மீதோ, கல்யாணம் மீதோ எனக்கு சுத்தமா நம்பிக்கையே இல்லை... உண்மையா சொல்லப் போனா, இவருடைய அன்பு என்னை இந்த அளவுக்கு மாத்தும்ன்னு ஒரு ஆறு மாசத்துக்கு முன்னாடி, ஏன் எங்க கல்யாணத்துக்கு ஒரு நாளுக்கு முன்னாடி சொல்லி இருந்தா கூட நானே நம்பி இருந்திருக்க மாட்டேன்... ஆனால், அவர் என் மேல வச்சிருக்கும் அன்பு என்னை முழுசா மாத்திருச்சு...”
கணவன் மீது பெரிதும் அன்பு வைத்திருந்த பாரதி, தன்னை மறந்து பேசிக் கொண்டிருக்க, அவள் சொன்ன விவேக்கின் அன்பு கற்பகத்தின் மனதில் ஏற்கனவே சிறிதாக கனன்றுக் கொண்டிருந்த பொறாமையை இன்னும் கொஞ்சம் அதிகமாக்கி விட்டது!
“விவேக்குக்கு இந்த விஷயம் எல்லாம் தெரியுமா?”
கடுமையாக ஒலித்த கற்பகத்தின் குரலில் வேறு ஏதோ உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்த பாரதி மீண்டும் பூலோகத்திற்கு வந்து சேர்ந்தாள்.
“தெரியும் அத்தை...” என்று இப்போதும் அமைதியாகவே பதில் சொன்னாள்.
கற்பகம் மேலே எதுவும் சொல்லாமல் முறைத்துப் பார்த்துக் கொண்டிருக்கவும், பாரதி குரலை மேலும் தணித்துப் பேசினாள்.