“உங்களுக்கு இந்த விஷயம் தெரியாது என்பதே எனக்கு தெரியாது அத்தை... வேற யாரோ சொல்லி உங்களுக்கு தெரியுதுன்னா அது உங்களுக்கு எவ்வளவு வருத்தமானதா கஷ்டமானதா இருந்திருக்கும்ன்னு எனக்குப் புரியுது... சாரி அத்தை... அந்த பதினெட்டு பத்தொன்பது வயசுல காலேஜ் சூழ்நிலையில...”
பேச்சை எப்படி முடிப்பது என்று புரியாமல் இழுத்தாள் பாரதி... கற்பகம் அப்போதும் அமைதியாக இருக்கவும், என்ன சொல்வது என்று புரியாது,
“சாரி அத்தை... இதனால் இங்கே நம்ம குடும்பத்தில் எந்த பாதிப்பும் வராமல் நான் பார்த்துக்குறேன்... நான் சொன்னது எல்லாமே உண்மை...” என்றாள்!
புத்திசாலியான பாரதி, விவேக் மீது அவளுக்கு இருந்த அன்பின் மிகுதியால், அவளையும் அறியாமல் ஒரு தவறை செய்திருந்தாள்... கல்லூரி நாட்களில் நடந்த தவறு என்று சொல்லி முதலிலேயே சொல்லி இருந்தால், கற்பகம் ஒருவேளை அதை ஏற்றுக் கொண்டிருப்பாளோ என்னவோ... ஆனால் பாரதியோ, விவேக் அவள் மீது வைத்திருக்கும் அன்பை பற்றி சொல்லி கற்பகத்தின் மனதில் ஏற்கனவே சலனத்தை ஏற்படுத்தி விட்டிருந்தாள்... அதனால் அதற்குப் பிறகு அவள் சொன்னது எதுவுமே கற்பகத்தின் காதில் ஏறவே இல்லை!!!
“எப்படி பார்த்துப்ப? ஊரில ஒவ்வொருத்தர் கிட்டேயும் போய் என் கிட்ட சொன்ன விளக்கத்தை சொல்வீயா? அந்த ரஞ்சனிக்கு உன்னைப் பத்தி மட்டுமில்லை, உன்னோட முன்னாள் காதலன் பத்திக் கூட தெரிஞ்சு இருக்கு... இந்நேரம் அவ வழியாவே இது ஒரு ஆயிரம் பேருக்காவது தெரிஞ்சிருக்கும்... இதுக்கு மேல இந்த குடும்பத்துக்கு வேற என்ன வேணும்? இன்னைக்கு வரைக்கும் ஒரு விஷயம் கெட்டதா வெளியில் யாரும் பேசினதில்லை... “
பாரதிக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை. திருமணத்திற்கு முன்பே இதைப் பற்றி எல்லாம் பெற்றோருடனும் பேச சொல்லி ஆனந்திடம் சொல்லி இருக்க வேண்டுமோ? ஆனால் அதைப் பற்றி இப்போது யோசித்து என்ன செய்வது?
பாரதியின் மனம் இந்த சிந்தனையில் ஆழ்ந்திருக்க, கற்பகம் மேலும் மேலும் 'குடும்ப கௌரவம்' பாழாகிப் போனதை சொல்லி புலம்பிக் கொண்டிருந்தாள்...