தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 45 - பிந்து வினோத்
45. எந்தன் உயிரே... எந்தன் உயிரே...
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
கற்பகத்தின் அறையை விட்டு வெளியே வந்த பாரதி, அருகே இருந்த சுவரோரம் சாய்ந்து நின்று தன்னை தானே இயல்பாக்கி கொள்ள முயன்றாள். கற்பகத்தின் வார்த்தைகள் ஏற்படுத்தி இருந்த கோபம் அவ்வளவு எளிதாக அடங்கி விடவில்லை... ஆழ்ந்த மூச்செடுத்து வெளியேற்றினாள்... கற்பகத்தை மறந்து மற்றவற்றை யோசிக்க முயன்றாள்... முதலில் அவளின் கவனத்தில் வந்தது அவளின் பசி தான்... பொதுவாக இந்த நேரத்தில் டி௧பன் சாப்பிட்டு பழக்கமாகி இருந்ததால், அவளுக்கு தானாக பசித்தது... கூடவே விவேக் சாப்பிட்டு இருப்பானா என்ற கேள்வியும் எழுந்தது!
பொதுவாக இருவரும் வீட்டில் இருந்தால் அவர்கள் இருவரும் ஒன்றாக கதைப் பேசிக் கொண்டு டிஃபன் சாப்பிடுவது வழக்கம்... விவேக்கின் நினைவு வந்ததுமே பாரதியின் கால்கள் தானாக அவர்களின் அறை நோக்கி நடக்க தொடங்கியது... கூடவே கற்பகத்தின் மீதிருந்த கோபமும் குறைந்துப் போனது... விவேக்கிற்கு அவன் அம்மாவின் மீதிருக்கும் பாசம் பற்றி அவளுக்கும் தெரியும் என்பதால், கற்பகம் கோபத்தில் பேசியதை பெரிதாக எடுத்துக் கொள்ள கூடாது என மனதில் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டாள்.
இயன்ற அளவில் முகத்தை சகஜமாக்கி கொண்டு, அவர்கள் அறையினுள் நுழைந்தாள் பாரதி. அவள் நினைத்ததுப் போலவே, விவேக்கிற்காக அவள் கொண்டு வந்து கொடுத்திருந்த உப்புமா அப்படியே மேஜையில் இருக்க, விவேக் லேப்டாப்பில் வேலையில் ஆழ்ந்திருந்தான். மனதில் இருந்த வருத்தங்களை விட, பசிக்கிறது என்று சொன்ன கணவன் சாப்பிடாமல் அவளுக்காக காத்து இருப்பது புரிய,
“உங்களை சாப்பிட சொல்லிட்டு தானே போனேன்? ஏங்க இப்படி செய்றீங்க?” என்றாள் பாரதி!
அவளின் பேச்சை கேட்டு திரும்பிய விவேக்,
“ஹேய், எனக்காக எத்தனை நாள் நீ வெய்ட் செய்திருப்ப! இதுல என்ன இருக்கு... சரி, வா வா சாப்பிடலாம்...” என்றான் ஈசியாக!
அவளுக்கு தனியாக கீழே இருந்து உப்புமா எடுத்து வருகிறேன் என்று கிளம்பியவளை, இருப்பதை இருவரும் பகிர்ந்துக் கொள்ளலாம் என்று சொல்லி தடுத்து நிறுத்தினான் விவேக்.