அவர்களுக்காக ஒதுக்க பட்டிருந்த அந்த குடில் போல் காட்சி அளித்த கட்டிடத்தின் அருகில் காரை நிறுத்தினான். அவர்கள் வருகைக்காகவே காத்திருந்ததுப் போல் ஒரு சிப்பந்தி வந்து காரில் இருந்து பெட்டிகளை எடுத்து வைக்கவும், பாரதி இறங்கி அங்கிருந்து தெரிந்த கடலை பார்த்து ரசித்தாள்.
முழு நாளும் வேலை செய்த அலுப்பில் வீடு திரும்ப சூரியன் எத்தனித்து கொண்டிருந்த அந்த நேரத்தில் கடல் அழகாக ஜொலித்தது.
காரை லாக் செய்து வந்த விவேக், மனைவியின் பார்வை இருந்த திசையை கவனித்து விட்டு,
“வா ரதி, கடல் பக்கம் போய்ட்டு வரலாம்,” என்றான்.
“இந்த நேரத்திலேயா? நாளைக்கு போகலாமே?” என்றாள் பாரதி தயக்கத்துடன்.
“நாளைக்கும் போகலாம். இப்போ வா,” என சொல்லிக் கொண்டே மனைவியின் கையை உரிமையுடன் பிடித்து இழுத்தபடி நடந்தான் விவேக்.
அவனின் வேக நடைக்கு ஈடு கொடுத்து நடந்த பாரதி,
“அப்பா, சரியான முரட்டு ஜீவன்... கை வலிக்குது விடுங்க...” என்றாள் சிணுங்கலாக!
“ம்ம்ம்...” நடந்துக் கொண்டே அவளை ஒரு பார்வை பார்த்தான் விவேக்!
“என்ன?”
“நான் முரடன்னு கல்யாணம் ஆகி நாலு மாசம் கழிச்சு தான் தெரியுதா?”
விவேக்கின் கேள்விக்கு பாரதி பதில் சொல்லும் முன் எங்கோ செல்ஃபோன் சிணுங்கும் ஓசைக் கேட்டது. அப்போது தான் மனைவியின் தோளில் இருந்த கைப்பையை கவனித்த விவேக்,
“இதையும் ரூம்ல வைக்க கொடுத்திருக்கலாமே ரதி?” என்றான்.