தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 51 - பிந்து வினோத்
51. எந்தன் உயிரே... எந்தன் உயிரே...
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
வீட்டிற்கு வந்ததற்குப் பிறகு பாரதி விவேக்கிடம் புதிதாக கேள்விகள் எதுவும் கேட்கவில்லை! அவள் அடுத்த நாள் கல்லூரிக்கு செல்ல தயாராக, விவேக் கட்டிலில் சாய்ந்து அமர்ந்து அவளையே கவனித்துக் கொண்டிருந்தான். அவனின் மனதில் புயல் வீசிக் கொண்டிருந்தது... அதை பாரதியிடம் பகிர்வதா வேண்டாமா... சொல்வதாக இருந்தால், எப்படி சொல்வது, என்ன சொல்வது என இப்போதும் குழம்பிக் கொண்டிருந்தான்...
பாரதிக்கு தெரியக் கூடாது என்பதற்காக ரிப்போர்ட் ஃபைலைக் கூட காரிலேயே வைத்து விட்டு வந்திருந்தான்... டாக்டர் தாமஸ் சொன்ன விபரங்கள் நினைவுக்கு வரவும், மேஜை மீதிருந்த லேப்டாப்பை எடுத்து 'கிரேட் த்ரீ சைஸ் ட்யூமர்' எனத் தேடினான். பெரும்பாலும் டாக்டர் சொன்ன தகவல்கள் தான் அவன் ஓபன் செய்த பக்கங்களில் இருந்தது...
அதைப் பற்றி அவன் யோசித்துக் கொண்டிருந்தப் போது,
"என்ன ஆனந்த், அதிசயமா இந்த டைம்ல லேப்டாப் ஓபன் செய்திருக்கீங்க???" என்றுக் கேட்டுக் கொண்டே அவன் அருகே வந்து அமர்ந்தாள் பாரதி.
அவன் பார்த்துக் கொண்டிருந்த பிரவுசரை மினிமைஸ் செய்து விட்டு,
"நீ டையர்டா இருக்குன்னு சொன்னீயே, சீக்கிரம் தூங்குறது உனக்கு நல்லது... நான் ஒரு பத்து நிமிஷம் மெயில் செக் செய்துட்டு தூங்குறேன்..." என்று சொல்லி சமாளித்தான் விவேக்.
"எனக்கொன்னும் அப்படி தூக்கம் வரலை..." என்று சொல்லிப் படுத்த பாரதி, உடல் அயர்வினால் சீக்கிரமே தூங்கி விட, விவேக் தூக்கமில்லாமல் தூங்கும் மனைவியையே பார்த்த படி இருந்தான்.
காற்றில் அவளின் நெற்றி மீது விழுந்திருந்த கற்றை முடியை விலக்கியவன், மெதுவாக அவள் கேசத்தை வருடியப் படி இருந்தான். ஒன்றரை ஆண்டுகளாக அவர்கள் இடையே ஏற்பட்ட ஒவ்வொரு சந்திப்பையும் மனதில் ரீவைன்ட் செய்து பார்த்தான். ஒவ்வொரு சந்திப்பும் அவன் மனதில் பொக்கிஷமாக பாதுகாத்து வைத்திருக்கும் நினைவுகள்...