பட்டே காலத்தை கழிப்பாள்... மாறாக, அவள் அவனை வெறுக்குமாறு செய்தால் அவனின் மரணம் அவளுக்கு ஒருவித விடுதலை உணர்வை தானே தரும்?
ஆனால், அவனை அவள் வெறுக்குமாறு செய்வதெப்படி? அவனின் ஒவ்வொரு அணுவும் அவளுக்காக உருகும் போது... இல்லை, செய்து தான் ஆக வேண்டும்.. அது தான் அவனுடைய ரதிக்கு நல்லது...
முடிவு எடுத்த பின், விவேக்கின் மனதில் இருந்த கவலை கொஞ்சம் குறைந்தது. ஆனால் ஏதோ மலையை தூக்கி வைத்ததுப் போல் மனதில் பாரம் கூடி இருந்தது. என்னை மன்னித்துக் கொள் ரதி, என மனதில் சொல்லிக் கொண்டான்.
🌼🌸❀✿🌷
பாரதி எப்போதும் போல் உற்சாகத்துடன் கல்லூரிக்கு தயாராகி கொண்டிருந்தாள். முன் தினம் அவளுக்கு விவேக் மீது கொஞ்சம் கோபம் இருந்தது... ஆனால், இரவில், காரில் கிடைத்த விவேக்கின் அணைப்பும், முத்தமும் அவளை மயக்கி இருந்தது. சரியான திருடன் என மனதில் செல்லமாக கணவனை திட்டியப்படி தலைவாரி முடித்தவள், விவேக் இன்னமும் பால்கனியில் நடந்துக் கொண்டிருப்பதை பார்த்து ஆச்சர்யப் பட்டாள்.
“டைம் ஆகுது ஆனந்த், சீக்கிரம் கிளம்புங்க... எனக்கு செகன்ட் ஹவர் கிளாஸ் இருக்கு... நான் போய் லஞ்ச் பேக் செய்றேன், நீங்க சீக்கிரம் கிளம்பி வாங்க, சாப்பிட்டுட்டு கிளம்புவோம்...”
விவேக் பதில் எதுவும் சொல்லாமல் அமைதியாகப் பார்த்தப்படி இருக்க, பாரதி முகத்தில் இருந்த புன்னகை மாறாமலே அறையில் இருந்து சென்றாள்.
சமையலறைக்கு சென்று அவளுக்கு மதிய உணவை எடுத்து வைத்து விட்டு, கணவனுக்காக காத்திருந்த பாரதி, உமாவுடனும், நித்திலாவுடனும் பேசி, விளையாடியபடி நேரத்தை செலவிட்டாள். எட்டு மணியான பிறகும் விவேக்கை காணவில்லையே என்று அவள் யோசிக்க தொடங்கிய நேரம், விவேக் கச்சிதமாக உடை அணிந்து மாடியில் இருந்து இறங்கி வந்தான். வெளீர் நீல நிற சட்டையும், கருப்பு நிற காட்டன் பேன்ட்டிலும் கம்பிரமாக தோன்றியவனை கண் இமைக்காமல் பார்த்து ரசித்தாள் அவள்.