வேலை செய்ய வேண்டாம்? இது எல்லாம் தானாகவே புரிஞ்சுக்கனும், புரிஞ்சுக்கலைன்னா இது மாதிரி தான் நோஸ் கட் எல்லாம் வாங்கனும்...” நக்கலாக ஒலித்த கற்பகத்தின் குரல் பாரதியின் குழப்பத்தை மேலும் அதிகப் படுத்தியது.
என்ன தான் ஆகிவிட்டது விவேக்கிற்கு? அவளா காரில் தான் வேலைக்கு போவேன் என்று அடம் பிடித்தாள்? அவன் தானே அவர்கள் இருவரும் ஒன்றாக போகலாம் என்று சொன்னது?
குழப்பத்தில் மனதில் தோன்றிய கேள்விகளுக்கு அவசரமாக கடிவாளமிட்டாள் பாரதி.
இல்லை, இது தவறு... நிஜமாகவே விவேக்கிற்கு ஏதாவது அவசர வேலை வந்திருக்கலாம்... அவளுடைய ஆனந்த் அவளை அப்படி எல்லாம் உதாசீனப் படுத்த மாட்டான்...!
மனதில் கொஞ்சம் தெளிவு ஏற்படவும்,
“நீங்க சொல்றதும் சரி தான் அத்தை...” என்று அமைதியாக கற்பகத்திற்கு பதில் சொல்லிவிட்டு, பேருக்கு உணவை கொறித்து, கல்லூரிக்கு கிளம்பினாள் பாரதி.
ஆனால், அவள் நினைத்தது போல் இது சின்ன விஷயம் இல்லை என்பதை அன்று மாலையே புரிய வைத்தான் அவள் கணவன்... !
மாலையில் கல்லூரி முடிந்தப் பின், பொறுமையாக கணவனுக்காக காத்திருந்தாள் பாரதி. அவள் இன்னமும் புதிய மொபைல் ஃபோன் வாங்கவில்லை என்பதால் விவேக்குடன் தொடர்புக் கொண்டு பேச முடியவில்லை. ஆனாலும் விவேக் காலேஜ் கேம்பஸினுள் வந்த உடன் தனக்கு தெரிவிக்கும் படி கல்லூரி செக்யூரிட்டியிடம் சொல்லி வைத்திருந்ததால், கவலை இல்லாமல் காத்திருந்தாள்.
மணி நான்கை கடந்து, பின் ஐந்தையும் கடக்கவும், பாரதியின் பொறுமை குறைய துவங்கியது. ஒருவேளை விவேக்கிற்கு திரும்பவும் அவசர வேலை ஏதாவது வந்திருக்குமோ என்று யோசித்தவள், அவனிடமே நேரே கேட்டு விடுவது என்று முடிவு செய்தாள்.