தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 57 - பிந்து வினோத்
57. எந்தன் உயிரே... எந்தன் உயிரே...
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
விவேக்கும் பாரதியும் அவர்களை சுற்றி இருந்தவர்களுக்கு சில பல குழப்பங்கள் ஏற்படுத்தி, தங்களுக்குள் கண்ணாம்பூச்சி ஆடி கொண்டிருக்க, நாட்கள் வேகமாக சென்றன! கல்லூரியில் தேர்வுகள் முடிந்து இரண்டு வாரம் விடுமுறை தொடங்கியது. எப்போதும் போல் இப்போதும், விடுமுறை தொடங்கியதற்காக வருந்தப் பட்டவள் பாரதி மட்டுமே!
பவித்ராவிடம் முன்பு போல மனம் விட்டு பேச முடியாததில் பாரதிக்கு வருத்தமாக தான் இருந்தது. மூன்று ஆண்டுகளாக அவளுக்காக இருந்தது பவித்ராவும், அவளின் குடும்பமும் மட்டும் தான். ஆனால், இப்போது தன் வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கும் குழப்பத்தில் பவித்ராவையும் ஈடுபடுத்தி குழப்ப பாரதிக்கு விருப்பம் இருக்கவில்லை. விவேக் அவளுக்கு ஏற்றவன் என்பதில் பாரதியை விட அதிக நம்பிக்கை வைத்திருந்தவள் பவித்ரா தான்! இப்போது விவேக்கின் உண்மை சொரூபம் தெரிந்தால்...
கணவனைப் பற்றி நினைத்ததும் மீண்டும் பாரதியின் மனம் கலங்கியது... அவளால் இன்னமும் விவேக் சொன்னதை முழுவதுமாக நம்ப முடியவில்லை. ஆனால் தினம் தினம் அவன் காட்டிய உதாசினமும், விலகலும் அவன் சொன்னது உண்மை என்று பறைசாற்றியது... நடந்தது எல்லாமே நடிப்பா? எவ்வளவு சாதாரணமாக சொல்லி விட்டான்! இப்படி சுயநலமாக கூட ஒருவனால் இருக்க முடியுமா?
பணத்தை பற்றி பாரதிக்கு கவலை ஏற்படவில்லை... அவனுடைய தொழில் மீது கொண்ட ஆர்வத்தில் தானே அவன் இதையெல்லாம் செய்தான், கட்டாயம் அதை தவறாக பயன் படுத்த மாட்டான்...
இப்போதும் விவேக் மீது தனக்கு இருக்கும் நமபிக்கையை நினைத்து பாரதிக்கே அதிசயமாக இருந்தது... அவள் வாழக்கை ஏதோ ரோலர் கோஸ்டர் பயணம் போல அல்லவா ஆகிவிட்டது? கொஞ்ச நாள் முன்பு வரை வானத்தில் பறந்துக் கொண்டிருந்தவள், இப்படி திடிரென, தரையில் விழுவாளென்று எதிர்பார்க்கவே இல்லையே...!
இனி அடுத்து என்ன செய்வது என்பது தான் பாரதிக்கு இப்போதும் புரியவில்லை... விவேக்கை பார்க்காமல் இருப்பது அவளுக்கு கடினம்! ஆனால், அவனின் உதாசினத்தையும், கடுமையான பேச்சுகளையும் சகித்துக் கொள்வதும் கடினம்...! வீட்டை விட்டு வெளியே சென்றால் பவித்ரா