“என்ன விஷயம் பவி?”
“ஒண்ணுமில்லை...”
பவித்ரா இப்போதும் அவனைப் பார்க்கமலே பேசவும், குரலை கொஞ்சம் மாற்றி, “பவி!” என்றான் ரமேஷ்!
“ப்ச்...”
அலுத்துக் கொண்டதை தாண்டி பவித்ரா புதிதாக வேறு எதுவும் செய்யவில்லை! ரமேஷின் பொறுமை கரைந்துப் போனது. ஒரு கையால் மனைவியின் கையில் இருந்த புக்கை பிடுங்காத குறையாக வாங்கி மூடி வைத்தவன், மறுக் கையால் அவளின் முகத்தை நிமிர்த்தினான்.
“என்ன ஆச்சு பவி? உனக்கும் பாரதிக்கும் நடுவுல ஏதாவது பிரச்சனையா?”
“அதெல்லாம் எதுவுமில்லை...”
மெல்லியதாக ஒலித்த பவித்ராவின் குரலே அவள் சொல்வது பொய் என்பதை சொல்லி விட,
“என்ன விஷயம்? பாரதி சண்டை எல்லாம் போட மாட்டாளே?” என்று மனைவியை சீண்டினான் ரமேஷ்... அதற்கு ஈடுக் கொடுப்பவனைப் போல அவளின் தலையை மென்மையாக வருடவும் செய்தான்!
ஆனால் அதுவும் கூட பவித்ராவின் கோபத்தை தடுக்கவில்லை... கணவனின் கையில் இருந்த புக்கை பிடுங்கி வாங்கியவள்,
“ஆமாம் அவ சண்டையே போட மாட்டா, நான் தான் எல்லோர் கிட்டேயும் சண்டை இழுத்துக் கிட்டே இருக்கேன்...” என்றாள் கோபம் குரலிலும் பிரதிபலிக்க!