துவங்கி ஒவ்வொருவரிடமும் காரணம் சொல்ல வேண்டும்...
ஆனால், பவித்ராவிடமோ மற்றவர்களிடமோ எந்த விளக்கத்தையும் கொடுக்காமலே அவள் இந்த ஊரில் இருந்தே இருந்து சென்று விடலாமே... விவேக் சொனனது போல் யாருமற்ற அநாதை தானே அவள்! ஓரளவிற்கு மேல் யார் அவளைப் பற்றி கவலைப் படப் போகிறார்கள்???
🌼🌸❀✿🌷
“பவி, நாளைக்கு தானே விவேக் பேரன்ட்ஸ் அனிவேர்சரி?” ரமேஷ் அன்றைய தேதியை கவனித்து விட்டு மனைவியிடம் வினவினான்!
தூங்கி கொண்டிருந்த குழந்தைக்கு மென்மையாக தட்டிக் கொடுத்தப் படி, ஏதோ கதையில் ஆழ்ந்திருந்த பவித்ரா,
“ம்ம்ம்...” என்று அசுவாரசியமாக முனங்கினாள்.
“நாம கிஃப்ட் எதுவும் வாங்கவே இல்லையே? நாளைக்கு டைம் இருக்குமா? எனக்கு நிறைய மீட்டிங் இருக்கே....”
“நான் நாளைக்கு அந்த ஃபங்க்ஷனுக்கு வரலை. நீங்க போறதா இருந்தா போயிட்டு வாங்க...”
அவனை நேராகப் பார்க்காமல் பேசிய மனைவியை நம்ப முடியாது பார்த்தான் ரமேஷ்!
“என்ன பவிம்மா இப்படி சொல்ற? பாரதி வீட்டு ஃபங்க்ஷன்! நரேந்திரன் சாரே நேரா நம்மளை கூப்பிட்டாரே! நாம போகாமல் இருந்தா நல்லா இருக்காது...”
“நல்லா இருக்காதுன்னா நீங்க போயிட்டு வாங்க, நான் வரலைன்னு தானே சொல்றேன்...”
இப்போதும் அவனைப் பார்க்காமலே பவித்ரா பேசவும், ரமேஷ் அவளின் அருகே சென்று அமர்ந்தான்.