ரமேஷ் பதிலுக்கு கோபப் படவில்லை! அவனுக்கு அவன் மனைவியை நன்றாக தெரியும்! மனதில் வருத்தம் இருந்தால் மட்டுமே அவளிடம் கோபம் வெளிப்படும்... அதை அறிந்திருந்ததால், நல்ல கணவனாக,
“நான் அப்படி சொல்லலியே! என்ன விஷயம் பவி? என்கிட்டே சொல்ல என்ன?” என மென்மையாகவே வினவினான்!
அவன் மேலும் சிறிது நேரம் தாஜா செய்தப் பிறகே, "பாரதிக்கும் விவேக்கும் நடுல எல்லாம் சரியா இல்லையாங்க... என்னமோ பிரச்சனை இருக்கு... இரண்டுப் பேரும் பெருசா சண்டைப் போட்டு இருக்காங்கன்னு விவேக்கோட அண்ணி உமா எனக்கு ஃபோன் செஞ்சு சொன்னாங்க... பாரதி இதைப் பத்தி என் கிட்ட ஒரு வார்த்தையும் சொல்லலை... இருந்தாலும் நானே அவக் கிட்ட பேசினேன்.. அப்போ கூட ஒண்ணுமே இல்லைன்னு என் கிட்ட பொய் சொல்லிட்டா..." என மேலோட்டமாக அவனிடம் விஷயத்தை சொன்னாள் பவித்ரா.
அவள் சொன்னதைக் கேட்டு ரமேஷ் சிரித்தான்...
“நான் அவ்வளவு ஃபீல் செய்து சொல்றேன், உங்களுக்கு சிரிப்பா இருக்கா?” என சொல்லி முறைத்தாள் பவித்ரா!
“பின்னே என்ன பவி, பாரதி உன் கிட்ட இதை சொல்லலைன்னா என்ன அர்த்தம்? உன் கிட்ட கூட விவேக்கை பத்தி குறை சொல்ல அவளுக்கு விருப்பமில்லைன்னு தானே அர்த்தம்? அவ அவர் மேல ரொம்ப அன்பு வச்சிருக்கா பவி... ஹஸ்பன்ட் ஒய்ஃப்ன்னா சண்டை இல்லாமலா இருக்கும்... பெருசா எதுவும் இருக்காது... உன் கிட்ட விவேக் பத்தி குறையா சொல்ல வேண்டாம்னு பாரதி நினைச்சிருப்பா...”
“ம்ம்ம்...”
“ஒவ்வொருத்தர் ஒவ்வொரு விதம்... நம்ம பாரதி எப்போதுமே வித்தியாசம் தானே? இதுல மட்டும் என்ன புதுசா உனக்கு இந்த கோபம் எல்லாம்? நீயே பாரதி கிட்ட உனக்கு விஷயம் தெரியும்னு சொல்லி பேசி இருக்கலாம் தானே? ஏதாவது சின்ன சண்டையா இருக்கும்...