மதியூர் மிஸ்டரீஸ் - 1 - தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 43 - Chillzee Story
This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.
சத்யா கேட்ட விதத்தினாலோ என்னவோ, “ஆமாம். அதை எல்லாம் இப்போ எதுக்கு பேசிட்டு,” என்றாள் அஹல்யா தயக்கத்துடன்!
“இல்லை அஹல்யா. ஒரு தடவை மனசு விட்டு என் கிட்ட சொல்லிட்டீங்கன்னா உங்க மனசுல இருந்தும் அது போயிடும். டாகடர்னா டாக்டர் பிரசாத்தையா சொல்றீங்க???” சத்யா அஹல்யாவை சமாதானப் படுத்தி, மீண்டும் கேட்டாள்!
“இல்லை இல்லை. டாக்டர் கிருஷ்ணான்னு ஒரு குழந்தைகளுக்கான டாக்டர் இருக்கார். நான் முன்னாடி தங்கி இருந்த வீடு பக்கத்துல அவரோட கிளினிக் இருக்கு!”
“எனக்கும் அவரை தெரியுமே!”
“ஆரம்பத்துல ரொம்ப நல்லவரா பேசினார். அருண் கிட்டேயும் அன்பா இருந்தார். எங்களை பத்தி கேட்டார். நானும் அருணும் தனியா இருக்கோம்னு சொன்னதுக்கு அப்புறம் அவரோட நடத்தையே மாறிப் போச்சு. அவரோட மனைவிக்கு உடம்பு சரி இல்லையாம். ரொம்ப வருஷமாவே பேச்சலர் வாழ்க்கை தான் வாழுறாராம்!”
“அடப்பாவி!”
“அவர் பேச்சு, பார்வை எதுவுமே சரி இல்லை. அருணை செக் செய்றேன்னு தேவையே இல்லாம தொட்டு தொட்டுப் பேசுவார். தப்பான அர்த்தம் வர மாதிரி எல்லாம் ஏதேதோ சொல்வார். அதுக்கு மேல அவரை பார்க்க போறதையே நிறுத்திட்டேன். கொஞ்சம் தூரமா இருந்தாலும் அம்ருதான்னு ஒரு லேடி டாக்டர் இருக்காங்க. அவங்க கிட்ட தான் இப்போ எல்லாம் அருணை அழைச்சுட்டுப் போறேன்!”
சத்யாவிற்கு இந்த தகவல் புதிதாக இருந்தது! அவளும் சக்தியும் விசாரித்தப் போது டாக்டர் கிருஷ்ணா என்னவோ அவ்வளவு நல்லவர் போல பேசினாரே!!!
அஹல்யா எங்கேயோ பார்த்துக் கொண்டு சோகமாக இருக்கவும், சத்யா மனசுக்குள் வந்த கேள்விகளை ஒதுக்கி விட்டு அவளை மீண்டும் சமாதானம் செய்தாள்.