எதிரில் நின்ற டெய்சியின் குரலில் சிந்தனையில் இருந்து வெளியே வந்தாள் பாரதி,
“சாரி ஆன்ட்டி, என்ன கேட்டீங்க?”
“உன்னுடைய சொந்த ஊரு எந்த பக்கம்? அம்மா அப்பா எல்லாம் அங்கே தான் இருக்காங்களா?”
பெற்றவர்களை பற்றி டெய்சி பேசவும், பல நாட்களாக இல்லாத விதமாக பெற்றவரின் அன்பிற்கு பாரதியின் மனம் ஏங்கியது. அம்மாவின் மடியில் படுத்து அழுது தீர்க்க மாட்டோமா என்று இருந்தது...
விவேக்கின் அன்பின் மீது நம்பிக்கை வைத்து, அவன் அன்று சொன்னதற்கு வேறு ஏதாவது காரணம் இருக்கும் என அதுவரை அவளுக்குள் இருந்த பலமான எண்ணம் இப்போது ஆட்டம் கண்டிருந்தது...
பாரதியின் உதடுகள் டெய்சிக்கு ஏதோ பதில் சொன்னது... ஆனால், அவளின் மனம் அதன் பாட்டில் எதை எதையோ நினைத்து கலங்கிக் கொண்டு இருந்தது!
அதற்குள் திரும்பி வந்த கற்பகம்,
“பாரதியை போரடிச்சது போதும், வா டெய்சி! நம்ம கலை, புவனா எல்லாம் அந்த பக்கம் இருக்காங்க...” என்றாள்.
“புவி வந்திருக்காளா? போகலாம்... ஆமாம் பாரதி, நீ கதை எல்லாம் ஏதோ எழுதுவியாமே?”
பாரதிக்கு அப்போது தனிமை தேவைப்பட்டது. உடனே கிளம்பிவிட மாட்டார்களா என்று எண்ணியபடி,
“பெரிசா எல்லாம் எதுவுமில்லை... சும்மா எழுதுறது தான் ஆன்ட்டி...” என்றாள்!