“அனுபவத்துக்கும் வயசுக்கும் என்ன சம்மந்தம் ஆன்ட்டி? வாழக்கையில ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதம்... சாரி ஆன்ட்டி, உமா என்னை தேடிட்டு இருப்பாங்க நான்...”
“ஆமாம் நாங்களும் எங்க ஃப்ரென்ட்ஸ் பார்க்க போகனும். இன்னும் நிறைய எழுது பாரதி...”
சொல்லிவிட்டு பெரியவர்கள் விலகி நடக்க, பாரதியின் கண்கள் மீண்டும் கணவன் பக்கம் சென்றது. அப்போதும் அருகில் இருந்தவளுடன் பேசிக் கொண்டிருந்தவனின் கண்கள் எதையோ தேடுவது போல் சுற்றுவதைக் பார்த்ததும், அவளின் பக்கத்தில் இருந்த தூண் மறைவில் ஒதுங்கி நின்றாள் அவள்.
விவேக் நின்றிருந்த இடத்தில் இருந்து அவள் நிற்கும் இடத்தை நேரடியாக பார்க்க முடியாது. ஒரு வேளை அவளை தான் தேடுகிறானா? இப்போது லாவண்யாவை அவன் அவளுக்கு அறிமுகப் படுத்துவதை இயல்பாக ஏற்றுக் கொள்ள இயலாது என்று தோன்றவும், அவசரமாக தோட்டம் பக்கம் சென்றாள் பாரதி. அவளை தேட இங்கே யார் இருக்கிறார்கள்?
அவளின் எண்ண ஓட்டத்தை அறிந்ததுப் போல்,
“என்ன சின்ன அண்ணி இந்த பக்கம் போறீங்க? வாங்க ஸ்நாக்ஸ் சாப்பிடலாம்,” என்றபடி மது அவளின் அருகே வந்தாள்.
கஷ்டப்பட்டு குரலையும் முகத்தையும் சாதாரணமாக காட்டிக் கொள்ள முயன்றபடி,
“லேசா தலை வலிக்குற மாதிரி இருக்கு மது! நான் கொஞ்சம் நேரம் தோட்டத்தில் இருக்கேனே...” என்றாள் பாரதி.
“தலைவலியா?? என்ன ஆச்சு சின்ன அண்ணி?”
“ஒண்ணுமில்லை மது... காலையில் இருந்தே கொஞ்சம் ஒரு மாதிரி தான் இருந்தது...”