“ஏதோ புக் எல்லாம் பப்ளிஷ் ஆகி இருக்குன்னு கற்பகம் சொன்னாளே?”
“ஸ்பெஷலா எதுவுமில்லை ஆன்ட்டி... ஒரு சிறுகதை தொகுப்பு.... பெண் அப்படிங்குற பேருல...”
பாரதி முழுவதையும் சொல்லி முடிக்கும் முன் ஆச்சர்யத்துடன் குறுக்கிட்டாள் டெய்சி!
“அட அந்த பாரதி விவேக் நீ தானா?”
பொறுமையை இழுத்து பிடித்து பேசிக் கொண்டிருந்த பாரதி, டெய்சியின் அந்த ஆச்சர்ய குரலில் திகைத்தாள்.
“ஏன் ஆன்ட்டி?”
“கையை கொடு நீ! அந்த புக்கில இருக்க கதை எல்லாமே அற்புதம்! அசந்துப் போயிட்டேன் நான்... அந்த பாரதி விவேக் இப்படி சின்ன பொண்ணா இருக்கும்னு நினைக்கவே இல்லை. ஏதோ வயதான அனுபவசாலி எழுதினதுன்னு நினைச்சேன்...”
பாரதி என்ன சொல்வது என்று புரியாமல் விழிக்க, கற்பகம் பெருமையுடன் மருமகளை பார்த்தாள்.
“ஐ ஆம் ஸோ வெரி ஹாப்பி பாரதி! அது நீ எழுதிய புக்குன்னு நான் நினைக்கவே இல்லை... நீ அந்த கதை எல்லாம் படிச்சிருக்கியா கற்பகம்?”
“இல்லைப்பா... பாரதி கதை எழுதுவான்னு தெரியும்... நான் படிச்சதில்லை...” என்றாள் கற்பகம்!
“டைம் கிடைக்கும் போது படிச்சு பாரு கற்பகம்! ரொம்பவே எதார்த்தமான கதைகள்... எப்படி இந்த சின்ன வயசிலேயே பெரிய அனுபவசாலி போல உன்னால எழுத முடியுது பாரதி?”
சற்று தொலைவில் விவேக்கும், லாவண்யாவும் இப்போதும் சிரித்தப்படி பேசிக் கொண்டிருப்பதை பார்த்த பாரதியின் கண்களின் ஓரம் அவளையும் அறியாது கரித்தது...!