தொடர்கதை - இன்று நீ நாளை நான் - 15 - சசிரேகா
மறுநாள் காலை கணக்குபிள்ளையோ சந்நியாசி போல காவி உடையணிந்துக் கொண்டு கொம்பன் வீட்டு முன் நின்று
”ஹரஹர சம்போ சிவசம்போ ஓம் நமசிவாய” என சத்தமாக சொல்ல அதைக்கேட்டு எழுந்தான் கொம்பன். காவேரியையும் எழுப்பிவிட்டான்.
இருவரும் என்னவென பார்க்க வெளியே வர அதற்குள் அவனது பெற்றோர்கள் வெளியே அதிர்ச்சியுடன் இருந்தார்கள், அவர்களின் அதிர்ச்சியை தொடர்ந்து கணக்குபிள்ளையைக்கண்ட காவேரி ஆச்சர்யப்பட கொம்பனோ அரண்டேப் போனான்
”நண்பா” என பாசமாக அழைக்க கணக்குபிள்ளையோ
”ஈசன் என்னை தேர்ந்தெடுத்துட்டாரு, இனி எனக்கு இங்க வேலையில்லை நான் காசிக்கு போறேன், போறப்ப எனக்கு இருக்கற எல்லா பந்தத்தையும் விட்டுட்டுப் போகனும்னு சாமியார் சொன்னதால இங்க வந்தேன், எனக்குன்னு இருக்கறது நீங்கதானே அதனால உங்ககிட்ட சொல்லிட்டேப் போறேன், இனி நான் எப்பவும் திரும்பி வரமாட்டேன் என்னை பார்க்கனும்னு ஆசைப்பட்டா காசிக்கு வாங்க” என சொல்ல கொம்பன் கண்கலங்கினான்
”சாமி ஏன் இப்படி திடுதிப்புன்னு”
”உன் வாழ்க்கையை பார்த்தபின்னாடி எடுத்த முடிவு இது, நீ சந்நியாசி ஆனா நானும் ஆகலாம்னு நினைச்சேன், ஆனா நீ சம்சாரியாகிட்ட நானாவது சந்நியாசி ஆகறேன்”
”ஏன் என்னைப் போல நீயும் சம்சாரியாகலாமே”
”வேணாம்பா நீ படற கஷ்டத்தை பார்த்து எனக்கு சம்சாரியாகனும்ங்கற எண்ணமே போயிடுச்சி எனக்கு இந்த வாழ்க்கைதான் பிடிச்சிருக்கு”
”ஒரு வார்த்தைகூட சொல்லாம இப்படி”