“ஆனால்...”
விவேக் மீண்டும் மறுப்பாக ஏதோ சொல்ல தொடங்கவும், கற்பகம் குறுக்கிட்டுப் பேசினாள்.
“இரு விவேக்! பாரதியை கேட்டு பார்ப்போம்... அவளுக்கு விருப்பம் இருந்தா கொஞ்ச நாள் தங்கி இருந்துட்டு வரட்டும்...”
விவேக் கோபத்துடன் பல்லைக் கடித்தான்... அவன் இருக்க போவதே பன்னிரண்டு மாதங்கள்... இதில் பாரதியை பார்க்காமல் எப்படி ஒரு மாதம் இருப்பது?
வேலையாள் சொன்னவுடன் அவசர அவசரமாக வந்த பாரதியின் முகத்தில் கமலாவையும், பவித்ராவையும் பார்த்து மலர்ச்சி தோன்றி இருந்தது.
“சாரிம்மா புக் படிச்சிட்டு இருந்தேன்...”
“அதனால் என்ன பாரதி, நாங்க தான் உன் அத்தையோட பேசிட்டு இருந்தோமே...” என்றாள் கமலா!
“பாரதி, உனக்கு லீவ் என்பதால் அவங்க வீட்டுக்கு கூப்பிடுறாங்க... பவித்ராவுடைய பி.ஹெச்.டி'க்கும் உதவியா இருக்கும்னு சொல்றாங்க... விவேக்குக்கு விருப்பம் இல்லை போல இருக்கு...” என சுருக்கமாக அவர்களின் உரையாடலை பகிர்ந்தாள் கற்பகம்.
பவித்ராவும் கமலாவும் வரும் விஷயம் பாரதிக்கு முன்பே தெரியும்! ஆனால் கற்பகம் சொன்ன 'விவேக்கிற்கு விருப்பம் இல்லை' என்பது புது நியூஸ்!!! யோசனையுடன் அவன் பக்கம் பார்த்தாள் அவள். விவேக் முகத்தை திருப்பிக் கொண்டு வேறு எங்கோ பார்த்தபடி அமர்ந்திருந்தான்.
“நீ என்ன பாரதி சொல்ற?”