கற்பகத்தின் கேள்விக்கு பதில் சொல்ல ஒன்றிரண்டு வினாடிகள் தாமதித்த பாரதி,
“உங்களுக்கு சரின்னா நான் பவி வீட்டில ஒன்னு இரண்டு வாரம் தங்கிட்டு வரேனே அத்தை...” என்றாள்.
“எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை... உன் விருப்பம் தான் முக்கியம்...”
“தேங்க்ஸ் அத்தை...”
“நீ என்ன சொல்ற விவேக்?” கற்பகம் மகன் பக்கம் திரும்பி கேட்டாள்!
“அது தான் நீங்களா முடிவு செய்தாச்சே, அப்புறம் ஏன் என்னை கேட்குறீங்க?” கோபமாக சொல்லிவிட்டு எழுந்து சென்றான் விவேக்.
அவனின் நடவடிக்கை கற்பகத்திற்கு புரியாத புதிராக இருந்தது! மூன்றாம் மனிதர்களின் முன் இப்படியா நடந்துக் கொள்வது???!!! அவனிடம் சென்று அதைப் பற்றி பேசுவதை விட இப்போது வீட்டிற்கு வந்திருக்கும் விருந்தாளிகளிடம் நிலைமையை சமாளிப்பது அவசியம் என்பதை உணர்ந்து கமலா பக்கம் கவனத்தை திருப்பினாள் அவள்!
விவேக் சென்ற திசையை யோசனையோடு பார்த்த பாரதியும், தயாராகி வருவதாக சொல்லிவிட்டு அறைக்கு சென்றாள்! அவள் ஏற்கனவே வேண்டிய துணிகளை பெட்டியில் எடுத்து வைத்திருந்ததால் ஐந்து நிமிடங்களில் தயாராகி, பெட்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்... அறையின் வாசலருகில் அவளையே பார்த்தபடி நின்றிருந்த விவேக்கை பார்த்து தயங்கி நின்றாள்...
விவேக்கின் பார்வை அவள் மீது தான் இருந்தது. ஏதோ அவளை பார்வையாலே விழுங்கி விடுபவன் போல் அவன் பார்த்த பார்வையில் மூச்சு விட மறந்து நின்றாள் அவள். அறையில் இருந்த கடிகாரம் ஆறு மணி ஆனதன் அடையாளமாக ஆறு முறை மணி அடிக்கவும், பாரதி சிந்தனை கலைந்து கணவனைப் பார்த்தாள். அவனும் இயல்புக்கு திரும்பியவனாக பார்வையை வேறு பக்கம் திருப்பி இருந்தான்.