“சத்யா பாஸ், நாம ஒரே ஒரு கேஸாவது சக்சஸ்ஃபுல்லா முடிச்சுட்டு அப்புறமா அந்த மேட்ச் மேக்கிங் மிஷனை கையில எடுப்போமே???”
“நீ சொல்றதும் சரி தான்! ஓகே சக்தி.”
“சத்யா, பொண்ணைக் கூப்பிடுறாங்க. சீக்கிரம் அஹல்யாவை கூட்டிட்டு வா,” சவீதா அங்கே வந்து சொல்லி விட்டுப் போனாள்..
சத்யாவும், அஹல்யாவின் அக்காவும் அஹல்யாவை மணமேடைக்கு அழைத்துப் போனார்கள்.
அஹல்யாவின் அம்மாவை அபினவின் அப்பா, அக்கா குடும்பத்தினருக்கு அறிமுகம் செய்து, அவர்கள் பக்கத்திலேயே உட்கார வைத்து விட்டு தள்ளி வந்தாள் சக்தி. சாந்ததுரை அவள் பக்கத்தில் வந்து நின்றுக் கொண்டான்.
சக்தி தள்ளிப் போகாமல் அவன் அருகிலேயே நின்று மணமேடையைப் பார்த்தாள்.
அபினவின் முகமெல்லாம் மலர்ந்து விகசித்துக் கொண்டிருந்தது. அஹல்யாவின் முகத்திலும் சந்தோஷமும் வெட்கமும் நிறைந்து இருந்தது. கெட்டி மேளம் என்ற குரல் கேட்ட உடன், கையில் கொடுக்கப் பட்ட தாலியை அஹல்யாவின் கழுத்தில் அணிவித்தான் அபினவ். அஹல்யாவின் முகத்தில் தெரிந்த உணர்வுகளை பார்க்கும் போது சக்திக்கும் நெகிழ்ச்சியாக இருந்தது. அவளையும் அறியாமல் கண்கள் கலங்கியது. மெல்ல சுண்டு விரலால் கண்ணீரை சுண்டி விட்டாள்.
“இரும்பிலே ஓர் இருதயம் முளைக்குதோ முதல்முறை காதல் அழைக்குதோ,“ சாந்ததுரை சக்திக்கு மட்டும் கேட்பது போல மெல்ல பாடினான். சக்தி கோபமே இல்லாமல் பெயருக்கு அவனைப் பார்த்து முறைத்தாள்.
மணமக்களின் பின்னே மணமேடையில் நின்றிருந்த சத்யா, தென்றல்வாணனை உரசியப் படி நின்றுக் கொண்டே அட்சதை தூவி அபினவ் அஹல்யாவை மனமார வாழ்த்தினாள்.