"அவங்க ஒரு விதவை, அவங்க மங்களகரமான நிகழ்ச்சிக்கு எல்லாம் வர கூடாதாம்..."
"ஓ! அப்பா ஒன்னும் சொல்லலையா?"
"அவரு அதெல்லாம் பார்க்குறவர் இல்லை... தனியா அவங்க கிட்ட கால்ல விழுந்து ஆசி வாங்கினோம்... ஆனாலும்... ப்ச்... கல்யாணத்துக்கு அப்புறம் உன்னையும் உன் அண்ணனையும் வளர்க்குறதிலேயே வாழ்க்கை ஓடிப் போச்சு... விக்கி ஓரளவுக்கு செட்டில் ஆயிட்டான்... இனி, உன்னையும் ஒரு நல்லவன் கையில் ஒப்படைச்சுட்டா..."
"நானும் ஒரு இருபது வருஷம் கழிச்சு இதே போல புலம்பலாம்...!!! போங்கம்மா, எனக்குன்னு லைஃப்பில சில லட்சியம் எல்லாம் இருக்கு... உங்களைப் போல் பசங்களை வளர்த்து, அப்புறம் இப்படி கூப்பிடாதே, அப்படி கூப்பிடாதேன்னு வேற யாராவது சொல்றதை கேட்க எல்லாம் நான் இங்கே பிறந்து வரலை..."
ராஜம் பதில் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்.
"சரிம்மா, ரொம்ப ஃபீல் செய்யாதீங்க... மத்தப்படி நீங்க சொன்ன மாதிரி அண்ணி குடும்பம் ஓகே தான்... அண்ணன் சந்தோஷமா இருந்தா சரி தான்..." என்று சொல்லி விட்டு அங்கிருந்து எழுந்து சென்றாள் வர்ஷா.
சற்று தள்ளி இருந்த நாற்காலியில் அமர்ந்து பேப்பர் படிப்பதாக காட்டிக் கொண்டு இருவரின் பேச்சையும் அதுவரை கவனித்துக் கொண்டிருந்த கணபதி, வர்ஷா எழுந்து உள்ளே செல்லவும் மனைவியின் அருகில் வந்து அமர்ந்தார்.
"என்ன ராஜி பயங்கர யோசனையில இருக்க?"
"ப்ச்... ஒன்னுமில்லை...." என்றாள் ராஜம் அலுப்புடன்!
"நீயும் வர்ஷாவும் பேசுறதை நான் கேட்டுட்டு தான் இருந்தேன்..."