”சும்மா இருடா ரொம்ப நாளா எனக்கு அவள் மேல ஒரு கண்ணு, வாய்ப்பு கிடைச்சது சரி ஏதாவது செய்யலாம்னு பார்த்தா வந்து கெடுத்துட்டியே””
”கொன்னுடுவேன் ராஸ்கல், அவளை நான் கல்யாணம் செய்துக்க போறேன்”
”அவளுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சி, புருஷன்காரன் செத்துட்டான், அது தெரிஞ்சும் அவளை கல்யாணம் செய்துக்க ஆசைப்படறன்னா ஒண்ணு அவள்கிட்ட நிறைய பணம் இருக்கனும் இல்லைன்னா அவள் அழகுல மயங்கிட்டியா என்ன”
”இரண்டும்தான் அவள் இருக்கற ப்ளாட்டோட இன்னிக்கு மார்க்கெட் ரேட்டே ஒரு கோடியை தாண்டும், தனியாளு அவள் சம்பாதிக்கற பணத்தை செலவு செய்யாம பத்திரமா வைச்சிருக்கா, ஆடம்பரமான வாழ்க்கையை வாழறா, அப்பா அம்மா பிக்கல் பிடுங்கல் ஏதும் இல்லை அதோட அவள் ரொம்ப அழகா இருக்கா, இப்படிப்பட்ட பொண்ணை எப்படி விடறது”
”ஏன்டா உனக்கே 2 கல்யாணம் ஆச்சி இதுல மூணாவது ஒண்ணு தேவையா நீ விடு நான் அவளை பார்த்துக்கிறேன்“
”அவளை என்னால விடமுடியாது, அவளோடதான் எனக்கு வாழ்க்கையே, அவள் அப்பாவி என்ன சொன்னாலும் நம்பறா எனக்கு அதுதான் தேவை, 2 கல்யாணம் செய்தும் என்னத்த பெரிசா நான் அனுபவிச்சேன். நிவேதினி பணக்காரி, அவளை கல்யாணம் செய்துக்கிட்டா கோடீஸ்வரனாகலாம்னு கனவு கண்டேன் ஆனா, கல்யாணம் ஆகியும் என்னை நிவேதினியோட வீட்ல ஏத்துக்கலை, அவளும் ஆடம்பர வாழ்க்கையை விட்டுட்டு என்கூட சாதாரண வாழ்க்கை வாழ விரும்பலை, டார்ச்சர் பண்ணா பதிலுக்கு நானும் அவளை டார்ச்சர் பண்ணேன், முடிவுல அவள் தற்கொலை செய்துக்கிட்டா அடுத்து அப்பா அம்மா பார்த்த பவானியை கல்யாணம் செய்துக்கிட்டேன், அவளால எனக்கு சொத்து கிடைக்கலைன்னாலும் ஏதோ மாசா மாசம் சம்பளம் வரும்னு பார்த்தேன் ஆனா, அவள் சென்டிமென்டல் இடியட், என்னை நிம்மதியாவே வாழ விடலை, அவளை என்னால பொறுத்துக்க முடியலை, எப்ப பாரு குழந்தை குழந்தைன்னு டார்ச்சர், அவளை எப்படிடா கழட்டி விடறதுன்னு யோசிச்சிட்டு இருந்தேன், ஒருநாள் அவளே தற்கொலை செய்துக்கிட்டு செத்துட்டா விட்டாச்சி சனியன்னு நானும் நிம்மதியாயிட்டேன்”