ஒரு முடிவு செய்தவளாக, கீதாவிடம்,
“என் ரூமை காட்டுறீங்களா அண்ணி? ஏதாவது ஞாபகம் வருதான்னு பார்ப்போம்,” என்றாள்...
“வாங்க,” என்று மகிழ்ச்சியுடன் அவளை அழைத்து சென்றாள் கீதா.
அந்த அறை மிக பெரிதாக காற்றோட்டத்துடன் இருந்தது. இரண்டு சுவர்களிலும் இருந்த ஜன்னல்கள் வழியாக வெளிச்சம் வரவும், நல்ல வெளிச்சத்துடனும் இருந்தது!
கிருத்திகாவிற்கு அந்த அறையை எங்கேயோ எப்போதோ பார்த்திருப்பது போல ஓரு எண்ணம் தோன்றியதே தவிர வேறு ஒன்றும் புரியவில்லை.
“ரூம் நல்லா இருக்கு,” என்றாள் பொதுப்படையாக!
கீதா புரிந்துக் கொண்டவளாக வேறு கேள்விகள் கேட்காது அமைதியாக நின்றாள்.
அவள் பக்கம் பார்த்த கிருத்திகாவின் முகம் மலர்ந்தது!
“உங்க கிட்ட நான் ஒரு பெரிய சாரி சொல்லனும் அண்ணி.”
“சாரியா??? என் கிட்டேயா? எதுக்கு?”
“விஜய் அண்ணா சொன்னார் நான் உங்க கிட்ட சரியா பேச மாட்டேன்னு...”
கிருத்திகா பேசி முடிக்கும் முன் குறுக்கிட்டு,
“அவர் என்ன சொன்னாருன்னு என் கிட்டேயும் சொன்னார். அதெல்லாம் ஒன்னுமில்லை! இப்போ எதுக்கு அதை பத்தி பேசிட்டு?” என்றாள் கீதா