விஜயின் காரை பின்தொடர்ந்து சென்ற தியாகுவின் மனதினுள் கிருத்திகவை முதல் முதல் சந்தித்தது தொடங்கி... டெல்லிக்கு செல்லும் முன் விடை பெற்று சென்றது வரை மின்னல் வேக காட்சிகளாக வந்து சென்றன...
காரில் இருந்து இறங்கும் முன் மறக்காமல் க்ளவ் கம்பார்ட்மென்ட்டை திறந்து அங்கே இருந்த பேப்பரை கையில் எடுத்துக் கொண்டான்...
விஜயும் காரை பார்க் செய்து விட்டு அவனின் அருகில் வந்தான்.
“எனக்கு கூட இந்த தெரபில கொஞ்சம் ரிசெர்வேஷன் இருந்தது மச்சான்... வழக்கம் போல பிரின்சஸ் தான் அதிரடியா செய்தே ஆகனும்னு சொன்னா... இந்த டாக்டர் நல்ல சமயத்துக்கு இந்தியா வந்தார்...”
விஜய் பேசிக் கொண்டே நடக்க, தியாகு ‘உம்’ கொட்டிக் கொண்டு அவனுடன் இணைந்து நடந்தான்.
கிருத்திகா இருந்த அறையினுள் விஜயை தொடர்ந்து நுழைந்த தியாகுவிற்கு அவன் மனைவியை தவிர வேறு எதுவும் கண்ணில் தெரியவில்லை...
அவளை சுற்றி இருந்த கீதா, சிவகாமி, ரங்கராஜன், குமரேசன், செவ்வந்தி... ஹுஹும்... ஒருவரும் அவனின் கருத்தை எட்டவில்லை...
மற்றவர்கள் ‘புடை சூழ’ நாற்காலியில் அமர்ந்திருந்த கிருத்திகாவும் உள்ளே வந்தவர்களில் விஜயை விட்டு விட்டு தியாகுவை தான் பார்த்தாள்...
அவள் முகத்தில், அந்த பார்வையில் ஏற்பட்டிருந்த மாற்றம் தியாகராஜனிற்குப் புரிந்தது... இது, அவனின் மனைவி...!
மனதில் இருந்த அத்தனை சஞ்சலங்களையும் மீறி, அவனின் மனதினுள் அவளை எப்போதும் பார்க்கும் போது ஏற்படும் இதம் பரவியது!