"நீ தப்பா நினைச்சா நான் என்ன செய்றது?"
"ஒன்னுமே செய்ய முடியாது தான்!"
துளசி சொன்ன விதத்தில் காமாட்சியால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை! சிரித்து விட்டு, "ஆமா, தனியாவா ஸ்டேஷன் போற?" என மருமகளிடம் வினவினாள்.
"ஆமா அத்தை..."
"உன் ஃப்ரென்ட் என்ன சின்ன குழந்தையா, அவளே வர மாட்டாளா?"
"அவ என்னை ஸ்டேஷன் எல்லாம் வர சொல்லலை அத்தை, நானே தான் அவளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு நினைச்சேன்."
"ஆனாலும் தனியா போறீயே.... டேவிட் கிட்ட சொல்லிட்டீயா?"
"டிரைவர் தாத்தா கிட்ட சொல்லியாச்சு. அவர் ரெடியா இருப்பார். நான் கிளம்ப வேண்டியது தான் பாக்கி..."
"அவர் வரதால பரவாயில்லை... ஆனாலும், உன்னை எப்படி தனியா துணை இல்லாம அனுப்புறது? நானும் உன் கூட வரேன்..."
"என்ன அத்தை நீங்க? நந்திதா சின்ன குழந்தை இல்லைனா நான் மட்டும் என்ன? இரண்டு மணி நேரத்துல வந்திருவேன். சாஹித்யா வேற எழுந்து தேடுவா..."
"அவளையும் கூட அழைச்சிட்டுப் போகலாம்... உன்னை தனியா அனுப்பிட்டு நான் இங்கே எதையாவது யோசிச்சுட்டே உட்கார்ந்திருப்பேன்..."
துளசி நிமிர்ந்து நேராக காமாட்சியைப் பார்த்தாள்...