சந்தோஷிற்கு உதய் நந்திதாவிடம் சொன்னது எதுவும் கேட்கவில்லை. ஆனாலும், உதய் அப்படி நந்திதாவின் அருகே போய் ரகசிய குரலில் பேசியது பிடிக்கவில்லை!
உதயின் தயவு அவனுக்கு வேண்டி இருந்ததால் அதை காட்டிக் கொள்ளாமல் அமைதியாகவே அவனுடன் நடந்தான்...
அவர்கள் இருவரும் அவளின் அறையை விட்டு சென்ற பின்பும் நந்திதாவிற்கு குழப்பமாக இருந்தது...
சந்தோஷை பல வருடங்கள் கழித்து நேரில் சந்தித்ததை விட, உதய் தான் அவளை மிகவும் குழப்பி இருந்தான்...
அவனின் பேச்சும், பார்வையும்...
ஆனால் உதய் சாதாரணமாக தானே நடந்துக் கொண்டான்... தடுமாற்றம் ஏற்பட்டது அவளுக்கு தான்...
சட்டென நெற்றியில் தட்டிக் கொண்டாள் நந்திதா!
‘நீ என்ன லூசா நந்து! ஏதோ கர்டசிக்காக எழுந்து நிக்காதீங்கன்னு சொல்லிட்டு போனார் உதுய், அதுக்கு போய் இவ்வளவு யோசிக்குற? சென்னை வெயில்ல உனக்கு ஏதோ ஆகிப் போச்சு போல இருக்கு...’
தன்னை தானே திட்டிக் கொண்டு, பார்த்துக் கொண்டிருந்த வேலையை தொடர்ந்தாள் அவள்.
❀✿❀✿❀✿
“ஆன்ட்டி, உங்க ஃபேவரைட் எல்லோ ரோஸ் பார்த்தேன். சூப்பரா இருக்கு பாருங்களேன்... உங்களுக்காகவே வாங்கிட்டு வந்தேன்...”