பிடிக்குமே,” என்றாள் காமாட்சி.
“அவளுக்கும் வாங்கி இருக்கேன் ஆன்ட்டி... பேக்ல வச்சிருக்கேன்... அவளை கொஞ்சம் நேரம் வெறுபேத்தி, அழ விட்டுட்டு அப்புறம் கொடுப்போம்... இப்போவே சொல்லாதீங்க...” என்றாள் நந்திதா ரகசியம் பேசும் குரலில்.
“என்ன இது கெட்ட பழக்கம்? இப்படி எல்லாம் விளையாடக் கூடாது. பாவம் துளசி...” என்றாள் ரேவதி கண்டிப்புடன்!
“யாரு, துளசி பாவமா? ஆஹா அவளைப் பத்தி உங்களுக்கு சரியா தெரியலை... சரத் கிட்ட தனியா கேட்டு பாருங்க அப்போ தான் தெரியும்...”
நந்திதா தன் வழக்கமான பாணியில் பேச, காமாட்சி குறுக்கிட்டுப் பேசினாள்.
“நந்து, துளசி கோவிலுக்கு போயிருக்கா. இப்போ வர நேரம்... அவ வரதுக்குள்ளே அந்த பூவை எங்கேயாவது வை...”
“கரக்ட் ஆன்ட்டி... நான் என் ரூமுல இருக்க ஃப்ரிட்ஜ்ல வைக்கிறேன்...”
சொல்லிவிட்டு நந்திதா அவளின் அறையை நோக்கி நடக்க தொடங்க, காமாட்சி,
“வா ரேவதி, நாம சுண்டல் சாப்பிட்டுட்டே பேசுவோம்,” என்று ரேவதியிடம் சொல்வது அவளின் காதிலும் கேட்டது.
பாதி மாடி படிக்கட்டுகள் ஏறிய நந்திதா, பூவை மேலே வைப்பதை விட கீழே இருக்கும் ஃப்ரிட்ஜில் வைத்தால் துளசியால் கண்டுப்பிடிக்க முடியாது என்று முடிவு செய்து, மீண்டும் இறங்கி வந்தாள்.
கிட்டத்தட்ட கடைசிப் படியில் அவள் கால் வைத்த நேரம், உணவறையில் இருந்து பேசும் பேச்சு அவளுக்கு கேட்டது...