பொறுமையாக நிதானமாக யோசித்து முடிவெடுத்திருந்திருக்க வேண்டுமோ என்று அவளுக்கு தோன்றியது.
கற்பகத்தின் கவனம் சரண்யா மீது சாய்ந்து நின்றுக் கொண்டிருந்த நிஷாவிடம் திரும்பவும், சரண்யா மெல்ல திரும்பி பெரியவளை பார்த்தாள்.
கற்பகத்தின் முகத்திலும் வருத்தக் கோடுகள் இருந்தன... மூன்று வருடங்களில் பத்து வருடங்களுக்கும் அதிகமான முதுமை தெரிந்தது....
வாஞ்சையோடு நிஷாவின் கேசத்தை வருடிக் கொண்டிருந்த கற்பகத்தின் மன ஓட்டத்தை சரண்யாவால் ஊகிக்க முடிந்தது.
மீண்டும் முகத்தை திருப்பி நேரே பார்த்தாள் சரண்யா. சடங்குகள் முடிந்து விட்டதின் அறிகுறியாக கோபியின் தந்தை கதிர்வேலும், தம்பி சுரேஷும் நடந்து வந்துக் கொண்டிருந்தார்கள்.
இவர்களின் அருகே வந்த உடனே, கதிர்வேல், “கிளம்பலாமா?” என்று மனைவியை பார்த்துக் கேட்டார்.
தலை அசைத்த கற்பகத்தின் பார்வை மீண்டும் சரண்யாவின் பக்கம் வந்தது.
சரண்யா இப்போதும் அமைதியாகவே நிற்க, சுரேஷ், “நீங்களும் வாங்க அண்ணி, உங்களையும் ட்ராப் செய்துட்டு போறோம்,” என்றான்.
சரண்யா என்ன பதில் சொல்வது என்று யோசிக்கும் முன்பே, “வேண்டாம்!” என்றார் கதிர்வேல் கொஞ்சம் கடுமையான குரலில்.
அதற்கு மேல் தான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று தோன்றியதால் சுரேஷை ஒரு பார்வை பார்த்து விட்டு அமைதியாக நின்றாள் சரண்யா.
“என்னப்பா... நிஷா முன்னாடி இப்படி பேசிட்டு,” என்றான் சுரேஷ் வருத்தத்துடன்.