“டேய்... உனக்கு ஒன்னும் தெரியாது நீ சும்மா இரு... இதெல்லாம் வெறும் நடிப்பு... நானும் உங்க அம்மாவும் கையெழுத்து போட்டா தான் அவளுக்கு பணம் முழுசா கிடைக்கும், அதுக்காக போடுற ட்ராமா... என்ன ஆனாலும் சரி, நான் சைன் போட்டு தர மாட்டேன்...”
வீராவேசமாக பேசிய கதிர்வேல் அதற்கு மேல் அங்கே நிற்காமல் நடக்க, கற்பகமும் அவசர அவசரமாக நிஷாவிற்கு ‘டாட்டா’ சொல்லிவிட்டு நடந்து சென்றாள்.
சரண்யா பக்கம் வருத்தத்துடன் பார்த்தான் சுரேஷ்.
“சாரி அண்ணி, தப்பா எடுத்துக்காதீங்க. அப்பா பத்தி உங்களுக்கு தெரியும்... மூணு வருஷமானாலும் அவர் இன்னும் சகஜ நிலைமைக்கு வரலை,” என்றவனுக்கு சரண்யாவிடம் போய் இப்படி சொல்கிறோமே என்று தாமதமாகவே உரைத்தது.
அவளுக்கும் தானே இழப்பு... அதுவும் அவர்கள் அனைவரையும் விட மிக பெரிய இழப்பு!
ஆனால் அவன் சொன்னதை சரண்யா தவறாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதை அவள் மேலே பேசியது எடுத்துக் காட்டியது.
“புரியுதுங்க சுரேஷ்... உங்க அண்ணாவோட கொஞ்சமா பழகினவங்களாலேயே அவரை மறக்க முடியாது... பெத்து வளர்த்து அத்தனை வருஷம் சீராட்டி பாராட்டி வளர்த்தவங்களாலே எப்படி முடியும்... உங்க அப்பா கோபத்திலேயும் நியாயம் இருக்கு... உங்க அண்ணா வீட்டை விட்டு போகலாம்னு சொன்னப்போ நானாவது தடுத்து நிறுத்தி இருக்கனும்...”
“என்ன அண்ணி நீங்களும் இப்படி பேசிட்டு இருக்கீங்க... சொல்லியாசு நடந்தாச்சு... அது நடந்து எத்தனை வருஷமாச்சு... அதுக்கு அப்புறம் எவ்வளவோ நடந்துப் போச்சு... இன்னும் நீங்க ஏன் அதை எல்லாம் யோசிச்சிட்டு இருக்கீங்க? அப்பாவை விடுங்க, கம்பெனி எப்படி போகுது? எல்லாம் நல்லா இருக்கு தானே?”
“ம்ம்ம்.... இப்போதைக்கு எல்லாம் சரியா தான் இருக்கு... ஆனால் கடனை அடைக்க தான்...”