“இப்போ எதுக்கு அண்ணி இந்தப் பேச்சு...” என்று அவளின் உதடுகள் மெல்ல முனுமுனுத்தது.
“இப்படியே இன்னும் எவ்வளவு நாள் சொல்லிட்டு இருக்க போற? எல்லாத்தையும் காலா காலத்துல செய்றது தான் நல்லது. உனக்கு பிடிச்ச மாதிரி வாழ்க்கை அமைச்சு கொடுப்பேன்னு அத்தைக்கு ப்ராமிஸ் செய்துக் கொடுத்திருக்கேன்.”
“அது எனக்கும் தெரியும் அண்ணி... நடக்க வேண்டிய காலம் வரும் போது எல்லாம் தானா நடக்கும்... இப்போ நான் கிளம்புறேன்... பை பை...”
“கவனமா பார்த்து ஸ்கூட்டியை ஓட்டிட்டுப் போ... பை...”
விடைப்பெற்று தன் ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு அலுவலகத்திற்கு கிளம்பினாள் தேன்மொழி.
✽✽✽
தேன்மொழி அன்று அலுவலகத்தை அடைந்தப் போது, ஏனோ என்றும் இல்லாத விதமாக அவளின் மனதில் ஒருவித பரபரப்பு இருந்தது. ஏதோ நடக்க போவதாக அவளுடைய உள்ளுணர்வு சொன்னது!
மனதை திசை திருப்ப, ஸ்கூட்டியை பார்க் செய்து விட்டு அன்றைய வேலைகளைப் பற்றி யோசித்தப் படி நடந்தாள்.
மனம் வேறு சிந்தனையில் இருந்தப் போதும், பழக்க தோஷத்தில் கால்கள் தானாக அவளை லிஃப்ட் பக்கம் அழைத்து வந்தது.
அங்கிருந்த கூட்டத்தை கவனிக்காமல் என்னவோ நடக்கப் போகிறது என்று சொன்ன உள்ளுணர்வை பற்றி மீண்டும் யோசித்தவள், லிஃப்ட் கீழே வந்து விடவும், மற்றவர்களோடு ஏறி நான்காம் மாடியை அடைய காத்திருந்தாள்.