“ஆகாஷ், அம்மாவும், ஆன்ட்டியும் நம்ம காருல வரட்டும்... நீ ட்ரைவ் செய்...” என மகனிடம் சொன்னவர், “பேபி நீ எங்க கூட வரீயா?” என அக்ஷராவை பார்த்து கேட்கவும்,
“இல்லை அங்கிள், நானும் அம்மா கூடவே வரேன்... நீங்க இரண்டு பேரும் என்ஜாய் செய்ங்க,” என்றாள் அக்ஷ்ரா.
அவள் சொன்னதை ஏற்றுக் கொண்டு மனைவியை அழைத்த பிரகாஷ், “சுபா, நீயும், அவங்களும் ஆகாஷ் கூட போங்க, நான் வசீ கூட வரேன்,” என்றார்.
கணவனுக்கு உடனே பதில் சொல்லாது சுபாஷினி இளையவர்கள் இருவரையும் பார்த்தாள். அக்ஷ்ரா கண் சிமிட்டி என் வேலை தான் என்று சிக்னல் கொடுக்கவும், மேலே எதுவும் கேட்காமல், “சரிங்க..” என்றாள்.
பிரகாஷும், வசீகரனும் கிளம்ப, ஆகாஷ், பெண்கள் படையுடன் காரை கிளப்பினான்.
அக்ஷ்ரா அவனுடன் முன் சீட்டில் அமர்ந்திருக்க, அம்மாக்கள் இருவரும் பின் சீட்டில் அமர்ந்திருந்தார்கள்.
“என்னடா செல்லக்குட்டி செஞ்ச? ஏன் அங்கிள் திடீர்னு ப்ளானை மாத்திட்டார்?” அக்ஷராவிடம் கேட்டாள் சுபாஷினி.
“அவர் ஈசியா உங்களை விட்டுட்டு கிளம்புறவரா என்ன ஸ்வீட்ஹார்ட்! ஒரு பொய் சொல்லி அனுப்பி வச்சேன்,” என்றாள் அக்ஷரா!
“என்ன பொய் சொன்ன? எதுக்கு சொன்ன?”
“அங்கிள் உங்களுக்கு பட்டுப்புடவை வாங்கி கொடுத்தாராமே...”
“ஆமாம்...” பெருமையும், வெட்கமும் கலக்க சொன்னாள் சுபாஷினி.