Chillzee Originals : தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 05 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
ஆகாஷ், தன் காரை பார்க் செய்து விட்டு லிஃப்ட்டின் வழியே ஏழாவது மாடியில் இருந்த தன்னுடைய அலுவலகத்தை நோக்கி சென்றான்...
அந்த கட்டிடத்தின் ஐந்தாவது, ஆறாவது மற்றும் ஏழாவது மாடி முழுவதிலும் அவனின் கம்பெனி தான் இருந்தது.
லிஃப்ட்டில் இருந்து வெளியே வந்தவன், நேராக கதவை திறந்து உள்ளே செல்லாமல், அவனின் அறைக்கு சுற்றி செல்ல இருந்த இன்னொரு வழியில் நடந்தான்.
மற்ற மாடிகளில் இருக்கும் அவனின் கம்பெனி பணியாளர்கள் லிஃப்ட் இல்லாமல் படிகளில் வந்தால் சுலபமாக நடக்க என்று இந்த நீண்ட corridor போன்ற அமைப்பை வைத்திருந்தான்.
இந்த வழியை அவனின் அறைக்கு செல்ல பயன்படுத்துவது என்பது தலையை சுற்றி மூக்கை தொடுவது போல தான்.
ஆனாலும் ஆகாஷ் அதை விரும்பி பயன்படுத்த ஒரே காரணம் அந்த corridorல் நடக்கும் போது கண்ணுக்கு குளிர்ச்சியாக நேரே தெரிந்த அழகிய மலர்களும், பச்சை பசலேன்ற மரங்களும் தான்.
இந்த கட்டிடத்தின் அருகிலேயே ஒரு பூங்கா இருந்தது. நல்ல விதத்தில் பராமரிக்கப் பட்டு வந்த அந்த பூங்காவில் இருக்கும் மலர்களும், மரங்களும் தான் இங்கே இருந்து அவனுக்கு காட்சி பொருளாக கண்ணில் பட்டது.
பிளைன்ட்ஸினால் மூடப் பட்டிருக்கும் ஜன்னல்கள் கொண்ட அலுவலகத்தினுள் சென்று விட்டால் வெளி உலகை முழுக்க, முழுக்க மறந்து விட வேண்டியது தான் என்பது ஆகாஷிற்கு தெரியும்.
அதனால் தான் கூடுதலாக பத்து நிமிடங்கள் செலவானாலும் பரவாயில்லை என்று இந்த காரிடாரின் வழியே அவனின் அறைக்கு செல்வான்.