காமாட்சி பக்கம் தயக்கமான பார்வை ஒன்றை தந்த துளசி, “அவளுக்கு தலை வலின்னு சொன்னா மாமா,” என்றாள்.
“என்னம்மா அவ சொன்னா அப்படியே விட்ருவீயா? என்ன ஃப்ரென்ட் நீ?”
“இல்லைங்க நான் தான் நந்திதாவை ரெஸ்ட் எடுக்க சொன்னேன்... பாவம் ஆஃபிஸ்ல வேலை அதிகம் போல, வரும் போதே தலைவலியோட தான் வந்தா,” என்று துளசியை முந்திக் கொண்டு பதில் சொன்னாள் காமாட்சி.
யோசிக்க ஒரு நொடி கூட எடுத்துக் கொள்ளாமல், “சரத், உதய் கிட்ட பேசி நந்திதாவோட வொர்க் லோடை குறைக்க சொல்லு,” என மகனிடம் சொன்னார் ராஜசேகர்.
துளசி ராஜசேகரை ஆச்சர்யத்துடன் பார்த்தாள்.
அவர் அவ்வளவு எளிதாக எல்லாம் ஒருவர் மீது பாசத்தையோ அன்பையோ வெளிக் காட்டுபவர் அல்ல...
நந்திதா மீது அவருக்கும் அபிமானம் இருக்கிறது போலும்!
தோழியை பற்றி நினைத்த உடனேயே மாலையில் நடந்தது நினைவுக்கு வந்து துளசியின் முகம் சுருங்கியது.
ரேவதியின் பேச்சுக்களை பக்கத்தில் நின்றுக் கேட்ட அவளுக்கே அப்படி இருந்தது என்றால், நந்திதாவிற்கு எப்படி இருக்கும்... எல்லாம் அந்த உதயினால் வந்தது...
முதலில் அவனை திட்ட வேண்டும்...
ரேவதியும், காமாட்சியும் தோட்டத்திற்கு போய் பேச போனதுமே நந்திதா தன் அறைக்குள் புகுந்துக் கொண்டாள்... அதன் பின் வெளியே வரவே இல்லை... அவளிடம் என்ன சொல்லி சமாதானம் செய்வது என்று துளசிக்கும் புரியவில்லை!