உணவை முடித்து விட்டு ராஜசேகரும், சரத்தும் சென்ற விட, காமாட்சி, “துளசி, ஒரு தட்டுல கொஞ்சமா சாதம் எடுத்து தரீயா?” என்று மருமகளிடம் கேட்டாள்.
“நந்துவுக்கா அத்தை??” என கேட்டாள் துளசி.
“ஆமாம்... அவளுக்கு தான்... நானே எடுத்துட்டு போய் தரேன்...”
“நான் அவளை வர சொல்றேன் அத்தை... நீங்க ஏன்?”
“இருக்கட்டும் பரவாயில்லை துளசி...”
“அப்போ இருங்க நானே எடுத்துட்டு வரேன்...”
துளசியும், காமாட்சியும் நந்திதா இருந்த அறை கதவை தட்டி விட்டு உள்ளே சென்ற போது, நந்திதா கட்டிலில் சாய்ந்து அமர்ந்து யோசனையில் இருந்தாள்.
இவர்கள் இருவரையும் பார்த்து விட்டு அவசரமாக எழுந்திருக்க முயன்றாள்.
“பரவாயில்லை நந்து,” என்று சொல்லிவிட்டு நந்திதாவின் அருகே சென்று அமர்ந்த காமாட்சி, நந்திதாவை உற்றுக் கவனித்தாள்.
நந்திதாவின் முகத்தில் கவலை ரேகைகள் இருந்தன... ஆனால் அழுததற்கான அறிகுறி இல்லை... தீவிர சிந்தனையில் இருக்கும் பாவம் தான் இருந்தது!
நந்திதாவின் கரத்தை பரிவுடன் பற்றிக் கொண்டாள் காமாட்சி...
“ஏன் நீ சாப்பிட வரலை?”
“அது... மனசு சரியில்லை ஆன்ட்டி...”