பூக்களை அடுக்கிக் கொண்டிருந்த சுபாஷினி, ஒன்பது மலர்களுக்கு பதிலாக எட்டு மலர்கள் மட்டுமே இருப்பதை கவனித்து விட்டு,
“அதென்ன ஆகாஷ், 11 பூ வாங்கி இருக்க?” என்று மகனிடம் கேட்டாள்.
தன்னுடைய யோசனையில் இருந்து திடுக்கிட்டு வெளியே வந்த ஆகாஷ்,
“பதினொன்னா? 12 இருந்துச்சேம்மா,” என்றபடி பூச்சாடியில் இருந்த மலர்களை கண்களால் கணக்கிட்டான்.
அங்கே எட்டு மட்டுமே இருப்பது புரியவும், ஒரே ஒரு வினாடி யோசித்தவனுக்கு உடைந்திருந்த பூவின் ஞாபகம் வந்தது!
“ஓஹோ!!!! ஒரு பூ லைட்டா உடைஞ்ச மாதிரி இருந்துச்சு. எங்கேயோ விழுந்திருச்சு போல இருக்கும்மா,” என்றான் ஏமாற்றத்துடன்.
“அது பரவாயில்லை விடு! ஒவ்வொரு பூவுக்கும் கடவுள் ஒரு கணக்கு வச்சிருப்பாராம். அந்த பூ எங்கே போய் சேரனும்னு அவர் யோசிச்சிருந்தாரோ அங்கே போய் சேர்ந்திருக்கும்... வா நாம கிளம்புவோம்....!”
பதில் சொல்லாமல் அம்மாவுடன் நடந்தான் ஆகாஷ்!
சுபாஷினி தீர்க்கதரிசியாய் சொன்னாளோ அல்லது பேச்சுக்கு சொன்னாளோ தெரியாது, ஆனால் ஆகாஷ் மனதினுள் ஆசைப்பட்டது தான் அவனே அறியாமல் நடந்திருந்தது...
ஆஃபிசில் இருந்து கிளம்பும் முன் மீண்டும் ஒரு முறை மேஜையை திறந்து அதனுள் இருந்த பூவை கண்களால் ரசித்தாள் சினேகா.
அது என்னவோ ஆகாஷிற்கு தெரியாமல் கீழே விழுந்ததால் அவளுக்கு கிடைத்த பூ தான்...