Chillzee Originals : தொடர்கதை - மாலையில் யாரோ மனதோடு பேச... - 23 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
அவசர அவசரமாக வீட்டில் தூசி தட்டி விட்டு நிஷாவை தேடி வந்த சரண்யா, அவளை யாரோ ஒரு ஆண் மகன் தூக்கி வைத்திருப்பதை பார்த்து ஆச்சர்யப்பட்டாள்...
அவளுக்கு முதுகு காட்டி நின்றிருந்த அவன் யாரென்று அவளுக்கு வீட்டில் இருந்து பார்த்த போது புரியவில்லை....
ஜெயந்தாக இருக்குமோ?
பெரிய காம்பவுண்ட் சுவர் மற்றும் செக்யூரிட்டி என முழு பாதுகாப்பு இருந்தாலும் கூட நிஷாவை தனியாக விளையாட விட அவளுக்கு மனசுக்குள் மெல்லிய பயம் இருந்துக் கொண்டே தான் இருந்தது... இப்போது நிஷாவை யாரோ ஒருவன் கையில் தூக்கி வைத்திருக்கவும் யாரோ என்னவோ என்ற பயம் எட்டிப் பார்த்தது...
யாராக இருக்கும் என்ற கேள்வியுடன் நிஷாவை அழைத்தப் படி, வேகமாக நிஷா விளையாடிக் கொண்டிருந்த இடம் நோக்கி நடந்தாள்...
சரண்யாவின் அழைப்பு காதில் விழுந்ததும் மித்ரனும் குரல் வந்த பக்கமாக திரும்பினான்...
அவனின் கையில் இருந்த நிஷா, “அம்மா,” என்று சரண்யாவை பார்த்து குதூகலித்தாள்!!!!
நிஷாவை தூக்கி வைத்திருப்பது மித்ரன் என்று தெரிந்ததோ இல்லையோ, சரண்யாவின் மனதில் இருந்த பயம் அகன்றது... ஆனால் அவளின் நடை தானாக நின்றது!
மித்ரனின் வீட்டிலேயே இருந்துக் கொண்டு அவனை பார்க்காமலே இருக்க முடியும் என்று அவள் நினைக்கவில்லை... ஆனாலும் அவனை நேருக்கு நேர் பார்த்த உடன் அவளுள் தயக்கம் தோன்றியது...
நிஷாவின் முன் எப்போதும் போல கோபமாக பேசிவிடுவானோ என்று வேறு பயமாக இருந்தது... எப்போதுமே மித்ரன் அவளிடம் சீற தானே செய்வான்...