“அஞ்சு நிமிஷம் அஜய்... நீ இட்லி சாப்பிடு... நான் லஞ்ச் பாக்ஸ் எடுத்து வைக்குறேன்,” என்றாள் சாரதா!
“ஏம்மா எல்லா வேலையையும் நீங்களே செய்றீங்க? அதான் உங்களுக்கு புதுசா ஒரு நிழல் வந்திருக்கே! ஒன்னு இரண்டு வேலையை அந்த பக்கம் கொடுக்க வேண்டியது தானே?”
ரோஹினிக்கு அஜய் அவளை தான் சொல்கிறான் என்பது அவனைப் பார்க்காமலே புரிந்தது. ஆனாலும் ஸ்டவ்வை விடு அவள் பார்வையை திருப்பவே இல்லை!
“ரோஹினியை ஏதாவது சொல்லாம உன்னால இருக்கவே முடியாதா அஜய்! அவ கிளம்பிப் போனப்புறம் என்னை விட நீ தான் அவளை ரொம்ப மிஸ் செய்வ போலருக்கு!”
“அது மட்டும் தான்ம்மா குறைச்சல்! சரிம்மா சட்னி கொடுங்க நான் இட்லி சாப்பிடுறேன்...”
சாரதா நீட்டிய சட்னியை வாங்கிக் கொண்டு அஜய் கிச்சனில் இருந்து சென்றப் பிறகு தான் ரோஹினியால் இயல்பாக மூச்சே விட முடிந்தது.
“இவனுக்காகத் தானே இங்கேயே நிக்குற. அவன் இப்போ கிளம்பிடுவான்! கவலைப் படாதே!”
ரகசியக் குரலில் அவளிடம் சொன்ன சாரதாவை கட்டிப் பிடித்து முத்தமிட வேண்டும் என்று ரோஹினிக்குத் தோன்றியது...
அந்த எண்ணத்தின் கூடவே வேண்டாத விருந்தாளியாக காலையில் நடந்ததும் நினைவுக்கு வரவும் அவளுக்கு என்னவோ போல இருந்தது...
‘ஹ்க்... ஹ்க்... ஹ்க்...’ என டைனிங் டேபிள் பக்கம் இருந்து விக்கல் சத்தம் கேட்டது!
“அச்சோ, அஜய்க்கா விக்கல்? அவன் தண்ணியே எடுத்துட்டு போகலையே. ரோ’ம்மா கொஞ்சம் அவனுக்கு தண்ணி எடுத்துக் கொடுக்குறீயா? இந்த காயை விட்டுட்டு போனா கரிஞ்சிடும்.